சீக்கிரமா அரசியலுக்கு வரனும் சாமீ... கிடா வெட்டிய தேனி ரஜினி ரசிகர்கள்
ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்காக தேனி மாவட்டம் கூடலூரில் ரசிகர்கள் கிடா வெட்டி வழிபட்டனர்.
கூடலூர்: ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என பிரார்த்தனை செய்து கிடா வெட்டினர் தேனி மாவட்ட ரசிகர்கள்.
தற்போது தமிழகத்தில் அதிமுகவின் செயல்பாடு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதை போல் அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி கடந்த மே மாதம் பேச ஆரம்பித்தவுடன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் 3 மாதங்களாகியும் இதுவரை அவர் அதிகாரப்பூர்வமாக வெளியிட வில்லை.
இந்நிலையில் நடிகர் கமலோ அவ்வப்போது ஆட்சியாளர்களை தாக்கி பேசி, தமிழர்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களை தட்டி கேட்டு வருகிறார். மேலும் விரைவில் தனிக் கட்சி தொடங்குவதாக அறிவிப்பையும் கமல் வெளியிட்டுள்ளார்.
ரஜினியை கூட்டணி அழைக்கும் வேகத்தில் கமல் செல்வதால் ரஜினி விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இதில் தேனி மாவட்டம், கூடலூரை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் லோயர் கேம்ப் பகுதிக்கு அருகே உள்ள சாமிக்கு 5 கிடா வெட்டி வழிபாடு நடத்தினர்.
ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என கிடா வெட்டி வழிபாடு நடத்திய ரசிகர்கள் #Rajinikanth superstarrajini #TnPolitics pic.twitter.com/bKMUeHTanD
— raja r (@Raja7dte) September 19, 2017
அப்போது ரஜினி விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் முதல்வராக வேண்டும் என்றும் ரஜினி வழியில் நதி நீர் இணைப்பை செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து அங்கு வெட்டப்பட்ட கிடாவை உணவாக தயாரித்து கோயிலுக்கு வந்தவர்களுக்கு விருந்து அளித்தனர்.