கலியுகத்தில் ரஜினி துரியோதனன்... அவருக்கு நான் கர்ணன்!
ரஜினி மாமன்னன் துரியோதனன்... அவருக்கு நான் கர்ணனைப் போன்ற நண்பன் என்று கூறியுள்ளார் நடிகரும் முன்னாள் எம்பியுமான மோகன் பாபு.
நேற்று சென்னை வந்த மோகன்பாபு, ரஜினிகாந்தையும் அவரது மனைவி லதாவையும் சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
ரஜினியைச் சந்தித்தது குறித்து மோகன் பாபு கூறுகையில், "என்னுடைய மிகச் சிறந்த நண்பனை சந்தித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன். நல்ல சந்திப்பு அது. அவர் ஒரு மன்னனைப் போல இருக்கிறார். இந்த கலியுகத்தில் அவர் துரியோதனன்... நான் அவருக்கு கர்ணன்," என்றார்.
லதா ரஜினிகாந்த் பற்றிக் குறிப்பிடுகையில், "நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது சிறந்த சகோதரி லதாவைச் சந்தித்தேன். அவர் இல்லாமல் ரஜினி இப்போது அடைந்துள்ள உயரத்தை எட்டியிருக்க முடியாது என்பதை உறுதியாக நம்புகிறேன்," என்றார்.
ரஜினியும் மோகன் பாபுவும் கடந்த 40 ஆண்டு காலமாக மிக நெருங்கிய நண்பர்களாகத் திகழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.