தனிக் கட்சியில் மும்முரம் சிரஞ்சீவி, பவன்கல்யாணிடம் ஆலோசனை கேட்ட ரஜினிகாந்த்!
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி கருத்து கேட்டவர்களில் நடிகர்கள் சிரஞ்சீவி, பவன்கல்யாணும் அடங்குவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களின் அரசியல் வாழ்வு எப்படி இருக்கும் என்று தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாணிடம் ரஜினிகாந்த் ஆலோசனை கேட்டதாக சொல்லப்படுகிறது.
போருக்கு தயாராக இருங்கள் என்று ரசிகர்களுக்கு சமிக்ஞை காட்டிய நடிகர் ரஜினிகாந்த் கிளப்பிய அரசியல் புகைச்சல் தமிழகத்தில் தொடர்ந்து புகைந்து வருகிறது. காலா படப்பிடிப்பிற்காக மும்பை செல்லும் முன்னர் அவர் யார் யாருடன் அரசியல் குறித்து பேசினார் என்ற தகவல் கசிந்துள்ளது.
ஜாதகப்படி ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று ஆரூடங்கள் சொல்லப்படும் நிலையில் அவர் அரசியலுக்கு வந்தால் என்ன கொள்கை இருக்கிறது என்று மற்றொரு பக்கம் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. ரஜினி தமிழ்நாட்டை சாராதவர் என்பதால் அவர் முதல்வராவதற்கு தகுதியில்லை என்று எழும் விமர்சனங்களுக்கு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

பத்திரிக்கையாளர்களுடன் சந்திப்பு
அரசியல் அரிச்சுவடி கற்கும் நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசியல் சூழல் குறித்து முன்னணி செய்தி நிறுவன ஆசிரியர்களுடனும் ஆலோசனை நடத்தினார். நக்கீரன் கோபால், நியூஸ் 18 மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சி போன்ற 24 மணி நேர செய்தி சேனல் ஆசிரியர்களையும் நேரில் சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து ரஜினி கேட்டறிந்தார்.

வாழ்த்து சொன்ன தமிழருவி மணியன்
இதனையடுத்து தமிழருவி மணியன் ரஜினிகாந்தை சந்தித்தார். ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பு குறித்து கூறிய தமிழருவி மணியன் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி, அவர் அரசியலுக்கு வந்தால் அவருக்கே என் ஆதரவு என்று தெரிவித்திருந்தார்.

என்ன கொள்கை?
இதே போன்று எம்ஜிஆர் காலத்தில் இருந்து அரசியலில் இருக்கம் மூத்த அரசியல்வாதி ஆர்.எம்.வீரப்பன், திமுவைச் சேர்ந்த ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோரிடமும் தனது அரசியல் வருகை குறித்து ரஜினிகாந்த் ஆலோசனை கேட்டாராம். அரசியலில் வருவதற்கு எந்த மாதிரியான கொள்கைகளை வகுப்பது, தலித் அரசியலை முன்வைத்து பயணத்தை தொடங்கலாமா போன்றவை குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டனவாம்.

சிரஞ்சீவி ஏன் சறுக்கினார்?
அரசியல் விமர்சகர்கள், பத்திரிக்கையாளர்கள், மூத்தத் தலைவர் என அனைவரிடமும் ஆலோசனை கேட்ட ரஜினி அண்டை மாநிலமான ஆந்திராவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் அரசியல் பயணம் குறித்தும் தொலைபேசி மூலம் கருத்து கேட்டாராம். அரசியல் ஆசையால் பிரஜா ராஜ்யம் என்ற தனிக்கட்சியைத் தொடங்கிய சிரஞ்சீவி பின்னர் கடும் தோல்வியடைந்ததால் காங்கிரசுடன் கட்சியை இணைத்து மத்திய அமைச்சர் பதவியை பெற்றவர். தனிக்கட்சி தொடங்குவதில் நடிகராக என்ன சிக்கல் இருக்கிறது என்று அரசியலில் சறுக்கும் சிரஞ்சீவியிடம் கேட்டறிந்தாராம் ரஜினிகாந்த்.

பவன்கல்யாண் ஏன் கட்சி தொடங்கினார்?
இதே போன்று பவன்கல்யாண் ஜனசேனா என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். அவரிடமும் எதற்காக கட்சி தொடங்கப்பட்டது, ஒரு நடிகரை மக்கள் அரசியல்வாதியாக எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் உள்ளிட்ட அம்சங்களையும் கேட்டறிந்தாராம் ரஜினிகாந்த்.

தொடரும் சந்திப்புகள்
இந்த ஆலோசனைகளையெல்லாம் முடித்த கையோடு தான் காலா படப்பிடிப்பிற்காக ரஜினி மும்பை பறந்துள்ளாராம். 40 நாட்கள் படப்பிடிப்பிற்காக மும்பையில் தங்கும் ரஜினி அங்கு வேறு சில வடமாநில அரசியல் தலைவர்களையும் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications