பாஜகவில் சீட் இன்றி கழற்றி விடப்பட்ட வானதி, தமிழிசை!
சென்னை: பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய பெண் நிர்வாகிகளான வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜனுக்கு சீட் கிடைக்கவில்லை. பெண்களுக்கு உரிய வாய்ப்புகளை பாஜக மறுத்துவிட்டதாக விமர்சனம் எழுந்தது.
பாஜகவில் ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியில் தமிழிசை போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுவிட்டது.
அதேபோல, கோவை தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது.

8 தொகுதியில் 6
இதனையடுத்து பாஜகவின் 8 தொகுதிகளில் 6 இடங்களில் அறிவிக்கப்பட்ட நிலையில் வேலூர், தஞ்சாவூர் தொகுதியில் பெயர் அறிவிக்கப்படாமல் இழுபறி நிலை நீடித்தது. இதில் வானதி சீனிவாசனுக்கு வேலூர் ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வேலூரில் ஏ.சி.சண்முகம்
இந்த நிலையில் வேலூர் தொகுதி புதியநீதிக்கட்சியின் வேட்பாளர் ஏ.சி சண்முகத்திற்கு ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து தஞ்சாவூரில் கருப்பு முருகானந்தம் அறிவிக்கப்பட்டார்.

கூட்டணிக்கு விட்டுக்கொடுத்தோம்
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், விரும்பிய தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்குச் சென்று விட்டதால் தேர்தலில் போட்டியிடும் சூழல் உருவாகவில்லை என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது சகஜம்தான்
தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு உரிய வாய்ப்புகளை பாஜக வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது. 5 கட்சிகளுடன் கூட்டணி அமைத்ததால் நாங்கள் விரும்பிய தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்குச் சென்று விட்டன. அதனால்தான், நான் தேர்தலில் போட்டியிடவில்லை. சில நேரங்களில் இதுபோல அமைந்து விடுவது சகஜமானது.

தேசிய அளவில் பொறுப்பு
பெண்களுக்கான உரிமைகளை தேர்தலை வைத்து அளவிட முடியாது. தேசிய அளவில் முக்கியமான பொறுப்பை கட்சி எனக்கு வழங்கியுள்ளது.
பாஜக கூட்டணியில் இணைந்த புதிய நீதிக் கட்சிக்கு முதலில் தொகுதி கிடைக்கவில்லை. இப்போது வேலூர் தொகுதி அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. யாருக்கு வாய்ப்புத் தருவது என்பது கட்சி மேலிடம் எடுக்கும் முடிவு.

ஆதரவுக்கு நன்றி
எனக்கு ஆதரவு தெரிவித்த தொண்டர்களுக்கு நன்றி. அதற்காக போராட்டம் நடத்துவது தவறு. அதனை ஒருபோதும் நான் ஆதரிக்க மாட்டேன். பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ரஜினி ஆதரவு கிடைக்குமா?
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நதிகள் இணைப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. நதிகளை இணைக்க ரூ.1 கோடி வழங்கத் தயார் என நடிகர் ரஜினிகாந்த் அப்போது அறிவித்தார். பாஜக ஆட்சிக்கு வந்தால் நதிகள் இணைப்புத் திட்டம் உறுதியாக செயல்படுத்தப்படும். எனவே, பாஜக கூட்டணிக்கு ரஜினிகாந்த் ஆதரவளிக்க வேண்டும் என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.












Click it and Unblock the Notifications