கமல்ஹாசன் திறமைசாலி, மக்கள் நம்பிக்கையை பெறுவார்.. புகழ்வது ரஜினிகாந்த்!
Recommended Video
சென்னை: ரஜினிகாந்த் இன்று சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர்களை சந்தித்தார்.
ரசிகர் மன்ற நிர்வாகிகளின் பெயர்களை கேட்டு தெரிந்து கொண்டார் ரஜினி. பிறகு அரசியல் கட்சிக்கு, கட்டமைப்புதான் முக்கியம் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
இதன்பிறகு மண்டபத்தை விட்டு வெளியே வந்த ரஜினியிடம் கேள்விகளை எழுப்ப நிருபர்கள் சூழ்ந்தனர். ஆனால் ரஜினிகாந்த் நிருபர்களை சந்திக்காமல் சென்றார்.
விரட்டிய நிருபர்கள்
ஆனால் ரஜினிகாந்த் நிருபர்களை சந்திக்காமல் வேகமாக போய் விட்டார். ஆனால் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டு விடாமல் நின்றிருந்ததால், சற்று தொலைவில் அமர்ந்தபடி அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
நிர்வாகிகள் நியமனம்
அப்போது அவர் கூறியதாவது: மாவட்டத்தின் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுப்பது முதல் பணி. 32 மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளை நியமித்து வருகிறேன். அவர்களை ஒரே நேரத்தில் சந்திப்பதற்கு சில காலம் ஆகும். நேரம் வரும்போது சுற்றுப்பயணம் சென்று நேரடியாக ரசிகர்களை சந்திப்பேன்.
காவிரி அனைத்து கட்சி கூட்டம்
காவிரி விஷயத்திற்காக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது நல்ல விஷயம். வரவேற்கத் தக்கது. இதேபோல, எல்லா விஷயங்களிலும் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என்றார்.
ரொம்ப நல்லா இருந்தது
கமல் அரசியல் கட்சி பற்றியும் அவரது பொதுக்கூட்டம் பற்றியும் உங்கள் கருத்து என்ன என்ற நிருபர்கள் கேள்விக்கு, கமல் அரசியல் கட்சி மாநாடு ரொம்ப நல்லா இருந்தது. வித்தியாசமாக இருந்தது. ஏற்கனவே கமலுக்கு வாழ்த்து கூறிவிட்டேன், மீண்டும் வாழ்த்தியுள்ளேன். அவர் திறமைசாலி என்பதால் மக்கள் நம்பிக்கையை விரைவில் பெறுவார், என்றார் ரஜினிகாந்த்.
சேரும் இடம்
நானும் கமலும் வேறு பாதையில் பயணித்தாலும் சேரும் இடம் ஒன்றுதான். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதுதான் இருவரின் நோக்கமும் என்றார் ரஜினிகாந்த்.