ஆமா...தமிழகத்தில் தலைவருக்கான வெற்றிடம் இருக்கு..நிரப்பதான் நான் வருகிறேன்: ரஜினி 'பொளேர்' பேச்சு
தமிழகத்தில் நல்ல தலைவனுக்கான வெற்றிடம் இருப்பதாகவும் அதனை நிரப்பவே தான் வருவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
Recommended Video
சென்னை : தமிழகத்தில் நல்ல தலைவனுக்கான வெற்றிடம் இருப்பதாகவும் அதனை நிரப்பவே தான் அரசியலுக்கு வருவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
சென்னை மதுரவாயலில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்ஜிஆர் சிலையை ரஜினி திறந்து வைத்து கூடி இருந்த மாணவர்கள் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
அவர் பேசியதாவது: எம்ஜிஆர் ஒரு தெய்வப்பிறவி, மக்கள் இன்னும் அவரை மறக்கவில்லை. 1973ல் எம்ஜிஆரைப் பார்த்தேன். எம்ஜிஆர் ஒரு யுகப்புருஷன், அவரைப் போல இனி யாரும் வர முடியாது.
எம்ஜிஆர் ஆட்சியை தருவேன்
ஏழை, எளிய மக்களுக்கு எம்ஜிஆர் கொடுத்த ஆட்சியை என்னாலும் கொடுக்க முடியும். நடிகனாக நான் என் வேலையை நன்றாக செய்து கொண்டிருக்கிறேன், ரசிகர்களை 60 வயதிலும் நான் மகிழ்வித்து வருகிறேன்.
ஏன் ஏளனம் செய்கிறீர்கள்?
96 முதலே என் மீது அரசியல் பார்வை விழுந்துவிட்டது. அதனால் அவ்வபோது அரசியலை நான் தெரிந்து கொள்கிறேன். கருணாநிதி, மூப்பனார், சோவிடம் நான் அரசியல் கற்றிருக்கிறேன். அரசியலுக்கு நான் வருகிறேன் என்றால் ஏன் ஏளனம் செய்கிறீர்கள்.
அரசியல் பாதை தெரிந்தவன்
அரசியல் பாதை எனக்கும் தெரியும், இது பூ, முள், பாம்புகள் இருக்கும் பாதை என்பது எனக்கு தெரியும். அதையெல்லாம் தாண்டி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே நான் அரசியலுக்கு வருகிறேன்.
பயம் எப்போதுமே இல்லை
ஜெயலலிதா இருக்கும் போது ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று கேட்கிறார்கள், அப்போது வராததற்கு பயம் காரணமா என்றும் கேட்கிறார்கள். ஜெயலலிதா இருந்த போதே நான் அரசியலுக்காக குரல் கொடுத்தேன். அப்போதே பயம் இல்லாத போது இப்போது எப்படி பயம் இருக்கும்.
வெற்றிடத்தை நிரப்பவே வருகிறேன்
இப்போது தமிழகத்தில் நல்ல தலைவனுக்கான வெற்றிடம் இருக்கிறது. கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லை, ஜெயலலிதா மறைந்து விட்டார். தமிழ்நாட்டில் நல்ல தலைவன் இல்லை என்பதால் அந்த இடத்திற்கு நான் வர விரும்புகிறேன் என்றும் ரஜினி பேசினார்.