மந்திராலயாவில் ரஜினி... "ஆண்டவன்" சொல்லிட்டாரா?.. "அருணாச்சலம்" அரசியலுக்கு வருகிறாரா??
ரஜினிகாந்த் டிசம்பர் 12-ல்தனது பிறந்தநாளில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மந்திராலயம் சென்று ராகவேந்திரரை வணங்கியுள்ளார்.
Recommended Video
சென்னை : புதிய அரசியல் கட்சி தொடங்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படும் நடிகர் ரஜினிகாந்த் அதற்கான அறிவிப்பை வரும் டிசம்பர் 12-ஆம் தேதி கூறுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வரது மந்த்ராலயா பயணம் ரசிகர்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்தை பல்வேறு ஆண்டுகளாக அரசியலுக்கு வருமாறு அவரது ரசிகர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர். ஆனால் அவரோ அதற்கு மௌனம் சாதித்தே வந்தார். மேலும் அரசியலுக்கு தான் வர விரும்பவில்லை என்பதை தனது படங்களின் வசனங்கள் மூலம் வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு, ரஜினிகாந்த் தனது ரசிகர்களை கடந்த மே மாதம் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த் ஆண்டவன் என்னை என்னாவாக ஆக்க விரும்புகிறாரோ அதன்படி நான் தற்போது நடிகனாகியுள்ளேன். நாளைக்கு நான் என்னாவாக ஆகவேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அதன்படி நான் செயல்படுவேன் என்றார்.
ரஜினி சூசகம்
இந்த பேச்சை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அரசியலுக்கு வருவது குறித்து அவரது மறைமுக பதிலாகவே கருதினர். சுமார் 5 நாள்கள் நடைபெற்ற அந்த சந்திப்பின்போது கடைசி நாளில் பேசியதுதான் ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்தது. ரஜினி பேசுகையில் தற்போது நான் நடிக்க வேண்டும். அது எனது தொழில். உங்களுக்கும் தொழில்,வேலை இருக்கிறது. எனவே அவற்றை பாருங்கள். போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்றார்.
பணிகள்
ரஜினி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்று தமிழருவி மணியன், அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் கூறினர். இதையே ரஜினியின் நெருங்கிய நண்பரும் கூறினார். இந்நிலையில் அரசியல் கட்சித் தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை ரஜினி மேற்கொண்டு வருகிறார் என்று தகவல்கள் வெளியானது.
தனிக்கட்சி
வரும் டிசம்பர் 12-ஆம் தேதி ரஜினி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அன்றைய தினம் அரசியல் கட்சி குறித்து அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் ஆந்திர மாநிலத்தில் உள்ள மந்த்ராலயத்தில் தனது ஆஸ்தான தெய்வமான ராகவேந்திரரை வணங்கினார்.
முக்கியத்துவம்
ஆண்டவன் கூறும்போது அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி கூறியிருந்த நிலையில் அவரது மந்த்ராலயம் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. டிசம்பர் 12-ஆம் தேதி அரசியல் கட்சித் தொடங்குவதற்காக தனது இஷ்ட தெய்வமான ராகவேந்திரரிடம் ஆசி வாங்கியதாகவே ரசிகர்கள் கருதுகின்றனர்.