7 பேர் விடுதலை: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பணியாளர்கள் சங்கம் மகிழ்ச்சி
சென்னை: பேரறிவாளன்,முருகன்,சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத்தனையை உச்சநீதிமன்றம் ரத்துசெய்ததையும், அதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரின் தண்டனையை முதல்வர் ரத்து செய்ததையும் வரவேற்றுச் சென்னை தரமணியில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பணியாளர்கள் சங்கம் சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்விற்குப் பணியாளர்கள் சங்கத்தலைவர் முனைவர் அ.ஆரோக்கியதாசு தலைமை தாங்கினார். செயலாளர் முனைவர் பா.கண்ணதாசன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் ஆட்சிமன்ற பாசறையின் ஒருங்கிணைப்பாளர் புலவர் மறத்தமிழ் வேந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். சங்கப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் சங்கத்தலைவர் முனைவர் அ.ஆரோக்கியதாசு பேசியதாவது:
தூக்குத்தண்டனைக் கைதிகளாக நாள்தோறும் தூக்குக்கயிறு தங்கள் குரல்வளையை அறுத்து உயிரை எடுத்திடுமோ என்ற மரண பயத்தின் உச்சத்தில் அவர்களும் அவர்கள் குடும்பங்களும் அனுபவித்து வந்த சொல்லொன்னா துயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள தீர்ப்பாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது. தமிழ் உணர்வாளர்களுக்கும் மனிதநேய உணர்வாளர்களுக்கும் கிடைத்த வெற்றியாகும் அதைவிட ஒருபடி மேலாக மூவரின் தூக்கை ரத்துசெய்ய வலியுருத்தி தன்னைத்தானே தீவைத்து எரித்துக்கொண்டு தன் இன்னுயிரை ஈந்து தமிழ்ப்பேரினத்தைத் தட்டியெழுப்பிய தோழர் செங்கொடியின் போர்க்குரளுக்குக்கிடைத்த வெற்றியாகும்.
உலக நாடுகளில் பெரும்பான்மையான நாடுகள் மரண தண்டைனையை ஒழித்துவரும் நிலையில் மாகாத்மா காந்திபிறந்த இந்தியாவில் மரண தண்டனை கூடாது எனும் முழக்கம் மேலோங்கிவரும் விவாதத்திற்கு மேலும் வலுவூட்டக்கூடிய தீர்ப்பாகவும் இத்தீர்ப்பு அமைகின்றது. அதேபோல் தமிழ்நாடு அரசு அவர்களின் விடுதலையை முடிவுசெய்யலாம் எனவும் வழங்கியுள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பையும் உச்சநீதிமன்றத்தையும் இத்தகைய வரலாற்றுப் பதிவைப் பொறித்திருக்கின்ற நம்மண்ணின் மைந்தர், மனித நேய மாந்தர் தலைமை நீதிபதி மாண்புமிகு நீதியரசர் சதாசிவம் அவர்களுக்கும் நம் நன்றியை உரித்தாக்கக் கடமைப்பட்டுள்ளோம்.அதேபோல் மூவரின் விடுதலைக்காக குரல்கொடுத்துவரும் அரசியல் கட்சி தலைவர்கள்,தமிழ் அமைப்புகள் தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் நாம் நன்றிகூறவேண்டும்' என்றார்.
சிறப்பு விருந்தினர் மறத்தமிழ் வேந்தன் பேசுகையில் :-
சாதி,மதம் போன்ற பிரிவிணை இல்லாமல் தமிழினமாக நாம் போராடியதன் பயனாக தமிழர்கள் இன்று காப்பாற்றப்பட்டுள்ளனர். தமிழ் எனும் கொடிகொண்டு கட்டி சாதி மதமற்ற தமிழ்ப்பேரினமாக நாம் ஒருங்கினைந்து தமிழ்ப்பேரினத்திற்கெதிராக வரும் சவால்களை முறியடிப்போம் என்று பேசினார்.
தமிழக முதல்வருக்கு நன்றி...
நேற்றைய உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பணியாளர்கள் சங்கம் நம்பிக்கை வைத்ததைப்போலவே இன்று தமிழக அமைச்சரவையில் மூவரையும் விடுதலைசெய்ய தீர்மானித்துத் தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதை வரவேற்றும் தமிழக முதல்வருக்கும் அரசுக்கும் நன்றி தெரிவித்தும் பணியாளர்கள் சங்கம் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.