ராஜீவ்காந்தி கொலை வழக்கு; பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை பற்றி ஆலோசித்து முடிவு: நிர்மலா சீதாராமன்
திருச்சி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து தனிப்பட்ட முறையில் எந்த முடிவையும் எடுக்க முடியாது. அதுகுறித்து ஆலோசித்து தான் முடிவு செய்யப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இதில், பேரறிவாளனின் தந்தை கடந்த 16 மாதங்களாக படுத்தபடுக்கையாக உள்ளார். தனது தந்தையை பார்க்க 30 நாட்கள் பரோலில் விட வேண்டும் என்று சிறைத் துறையினரிடம் பேரறிவாளன் மனு அளித்திருந்தார். ஆனால் மத்திய அரசின் சட்டவிதிமுறை காரணமாக பரோல் தர முடியாது என்று சிறைத்துறை மறுத்து விட்டது.
பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் தங்களை கவனித்துக் கொள்ள மகனை பரோலில் விட வேண்டும் என்று அமைச்சர்களை சந்தித்து அற்புதம்மாள் மனு அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை அ.தி.மு.க ஆதரவு எம்எல்ஏ-க்களான கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் கையில் எடுத்துள்ளனர். நடப்பு சட்டசபைத் தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரவும் அரசியல் கட்சிகள் முயன்று வருகின்றன.
இந்நிலையில் திருச்சியில் ஜி.எஸ்.டி தொடர்பான விளக்க கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது நிச்சயம். எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் குறித்து மத்திய சுகாதாரக் குழு அறிவிக்கும் என்று தெரிவித்தார்.
மேலும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிககளை விடுவிப்பது மனித உரிமை தொடர்புடையது. தனிப்பட்ட முறையில் எந்த முடிவையும் எடுக்க முடியாது. இதுகுறித்து ஆலோசனை செய்து அதன்பின்னர் தான் முடிவு எடுக்க முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications