நெஞ்சுவலி என ஒதுங்கிய ராம மோகன ராவ் திடீரென பொங்கியதன் பரபர பின்னணி!
சென்னை: முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற நிலையில், திடீரென இன்று பேட்டியளித்த அவர் அரசியல் ரீதியிலான கருத்துக்களை அதிகம் எடுத்துரைத்துள்ளார்.
அவரது பேச்சில் மிகுந்த ஆவேசம் தென்பட்டது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நன்றி சொல்லும்போதும், இது அரசியலமைப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல் என கூறும்போதாகட்டும் அவரது குரல் மிகவும் ஆவேசமாக இருந்தது.

தான் ஒரு கோழை இல்லை என்றும், மறைந்த ஜெயலலிதாவால் பயிற்சி கொடுக்கப்பட்டவன் என்றும் அவர் கூறி, ஜெயலலிதா ஆதரவாளர்களின் அனுதாபத்தையும், ஆதரவையும் தேட முயற்சித்தார்.
ஜெயலலிதா vs பன்னீர்
ஜெயலலிதா நியமித்த தன்னை சஸ்பெண்ட் செய்து அந்த ஆர்டரை காண்பிக்க தற்போதைய மாநில அரசுக்கு கட்ஸ் இல்லை என்று பகிரங்கமாக ஓ.பன்னீர்செல்வம் அரசை விமர்சனம் செய்தார் அவர். மேலும், ஜெயலலிதா முடிவுக்கு எதிராக பன்னீர் செல்வம் அரசு செயல்படுவதை போன்ற தோற்றத்தை அவர் உருவாக்க முயன்றார்.
தைரியம்
பன்னீர்செல்வம் அரசு பாஜக அரசோடு சேர்ந்து தன்னை பழிவாங்க முற்படுவதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்த அவரது பேட்டி உதவியது. இந்த அளவுக்கு ஒரு அரசு அதிகாரிக்கு தைரியம் எப்படி வந்தது என்பதே கேள்வி.
இதுவும் உண்மை
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் துணை ராணுவம் தலைமைச் செயலகத்திற்குள் வந்திருக்குமா என கேட்டார் ராம மோகன ராவ். அதேபோல ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால் இதேபோல முதல்வரை எதிர்த்து பேச ஒரு அரசு அதிகாரி என்ற முறையில் இவருக்கும் தைரியம் வந்திருக்காது என்பதே உண்மை.
நெஞ்சு வலி
தலைமைச் செயலகத்தில் சோதனை நடைபெற்ற பிறகு, திடீரென நெஞ்சுவலியை காரணம் காண்பித்து போரூரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று காட்சிகளில் இருந்து ஒதுங்கியிருந்த ராம மோகனராவ், திடீரென இன்று நிருபர்கள் முன்பாக தோன்றி, தான் கோழையில்லை என கூறுகிறார் என்றால் நடுவே நடந்த காட்சிகள் என்னவாக இருந்திருக்கும் என்ற கேள்வி எழுகிறது.
எதிர்ப்பு அரசியல்
தொடக்கம் முதலே மத்திய அரசை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என்றுதான் சசிகலா கணவர் நடராஜன் தெரிவித்து வருகிறார். ஆனால் பன்னீர்செல்வம் தரப்புதான் ஒத்துழைக்கவில்லையாம். இந்த நிலையில், போயஸ் இல்லம் வரை வருமான வரி சோதனையின் கரங்கள் நீள ஆரம்பித்ததும், எதிர்ப்பு அரசியலை சசிகலா தரப்பு கையில் எடுத்துள்ளதாகவும், அதன் கை பொம்மையாகவே ராம மோகன் ராவ் மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அம்புகள்
முதல்வர் ஓ.பி.எஸ் தரப்பிலிருந்து வருமான வரி சோதனைக்கு எதிர்ப்பு அறிக்கை வராத நிலையில், அதிமுக எம்.பி. பாலசுப்பிரமணியன் மூலம் மத்திய அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டு சசிகலா தரப்பு தங்கள் கோபத்தை காட்டியதாக கூறப்பட்டது. இப்போது ராமமோகன ராவ் பேட்டியும் ஓ.பி.எஸ் மற்றும் மோடி அரசை முழுமையாக எதிர்ப்பதை போல உள்ளதை வைத்து பார்க்கும்போது, போயஸ் கார்டனிலிருந்து மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு எதிராக இனி வரிசையாக அம்புகள் கிளம்பும் என தெரிகிறது.
அரசியல் ஆதரவு
அரசியலில் தங்களுக்கு ஆதரவு வேண்டும் என்பதற்காக தேடி பிடித்து மோடி எதிர்ப்பாளர்களான மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி பெயர்களை உச்சரித்துள்ளார் ராம மோகனராவ். இனிமேலும் பொறுத்தால் முதலுக்கே மோசம் வந்துவிடும் என்பதால் எதிர்ப்பரசியல் செய்ய கிளம்பியுள்ள கார்டன் வட்டாரங்களில் ஊது குழல்தான் ராம மோகனராவின் இன்றைய பேட்டி என்கிறார்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications