பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி ஓட்டு போட்ட மக்களுக்கு தண்டனை தரும் பாஜக- ராமதாஸ்
சென்னை: தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தி வருகின்ற மத்திய அரசு, வாக்களித்த மக்களுக்கு தண்டனை கொடுத்து வருகின்றது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்த அவரது அறிக்கையில், "பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.19 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாயும் உயர்த்தப்பட்டிருக்கின்றன. இதையடுத்து சென்னையில் பெட்ரோல் விலை 61.32 ரூபாயாகவும், டீசல் விலை 50.09 ரூபாயாகவும் அதிகரித்திருக்கிறது. அடித்தட்டு மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வு கண்டிக்கத்தக்கதாகும்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததாகக் கூறி கடந்த மார்ச் 17 ஆம் தேதி தான் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.06 ரூபாயும், டீசல் விலை 1.96 ரூபாயும் உயர்த்தப்பட்டன. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பே மீண்டும் ஒருமுறை எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் இன்று வரையிலான 35 நாட்களில் பெட்ரோல் விலை இரு தவணைகளில் 5.25 ரூபாயும், டீசல் விலை 3 தவணைகளில் 4.47 ரூபாயும் உயர்த்தப் பட்டிருக்கின்றன. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்த போது கூட இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இந்த அளவுக்கு உயர்த்தப்பட்டது கிடையாது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாதமும் 1, 16 ஆகிய தேதிகளில் தான் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படும். ஆனால், இம்முறை அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் முதல்கட்ட தேர்தல் முடியும் வரை காத்திருந்து, விலையை உயர்த்தியதிலிருந்தே மையஅரசின் நேர்மையின்மை அம்பலமாகி விட்டது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டதாகக் கூறி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் கடந்த காலங்களில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது அதன் பயனை நாட்டு மக்களுக்கு அளித்திருக்க வேண்டுமல்லவா? ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான அரசு அவ்வாறு செய்யவில்லை. மாறாக கடந்த 2014 நவம்பர் மாதம் முதல் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரி 9 தவணைகளில் லிட்டருக்கு 11.77 ரூபாயும், டீசல் மீதான வரி 13.47 ரூபாயும் உயர்த்தப்பட்டது.
முந்தைய ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்ட போது அதை எதிர்த்து பாரதிய ஜனதா போர்க்கோலம் பூண்டது. எரிபொருள் விலை உயர்வால் ஏழைகள் பாதிக்கப்படுவார்கள் என்று கண்ணீர் வடித்தது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை பெருமளவு குறையும் என பிரதமர் வேட்பாளர் முதல் மக்களவை உறுப்பினர் வேட்பாளர் வரை அனைவரும் வாக்குறுதி அளித்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் அத்தனையையும் காற்றில் பறக்கவிட்டு, முந்தைய அரசு செய்த தவறுகளை மட்டுமின்றி, செய்யாத தவறுகளான கலால்வரி உயர்வையும் சேர்த்து செய்கிறது பாஜக. இவற்றையெல்லாம் நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்த தண்டனையாகவே பார்க்கத் தோன்றுகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் வலியை உணர்ந்து அவற்றை நடுவணரசு திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால் தாங்கள் அனுபவித்து வரும் வலியை பாரதிய ஜனதாவும் அனுபவிக்கும் நிலையை தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஏற்படுத்துவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications