மெட்ரோ ரயில் பணிகளை தனியாரிடம் ஒப்படைத்தால் பாதகம்தான் அதிகம்.. ராமதாஸ் கண்டனம்
மெட்ரோ ரயில் பணிகளை தனியாரிடம் ஒப்படைத்தால் பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை: மெட்ரோ ரயில் பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பதால் பாதகம்தான் அதிகம் என்றும், இதனால் பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் அரசின் இந்த முடிவை கைவிட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
சென்னை பெருநகரத் தொடர்வண்டிகளை இயக்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க சென்னை பெருநகர தொடர்வண்டி நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதற்கான நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதற்காக ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டிருக்கிறது. அரசின் இந்த முடிவிற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தொடரும் பணிகள்
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்குடன் பெருநகரத் தொடர்வண்டித் திட்டம் உருவாக்கப்பட்டு படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை வண்ணாரப்பேட்டையிலிருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையம் வரை 23.085 கி.மீ. நீளத்திற்கு ஒரு பாதை, சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்திலிருந்து அண்ணாநகர், கோயம்பேடு வழியாக ஆலந்தூர் வரை 21.96 கி.மீ நீளத்திற்கு ஒரு பாதை என மொத்தம் 43.40 கி.மீ. நீளத்திற்கு இரு பாதைகளில் தொடர்வண்டிகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் ஆகிய இரு வழித்தடங்களில் 19 கி.மீ. நீளத்திற்கு தொடர்வண்டிகள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு இறுதிக்குள் மொத்தமுள்ள 43.40 கி.மீ நீள பாதையிலும் தொடர்வண்டிகள் இயக்கப்படும் என்று அறிவித்து, அதற்கான பணிகளை பெருநகர தொடர்வண்டி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

தனியாரிடம் ஒப்படைக்கத் துடிப்பது ஏன்?
பெருநகர தொடர்வண்டிகள் முதல் தொடர்வண்டி நிலையங்கள் வரை அனைத்தும் மிகவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த பணிகள் அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கத் துடிப்பது தேவையற்றது. பெருநகரத் தொடர்வண்டிகளை இயக்குவதற்கான செலவுகளை குறைக்கும் நோக்குடன் இந்நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக சென்னை பெருநகர தொடர்வண்டி நிறுவனம் கூறியுள்ளது. ஆனால், அது சாத்தியமல்ல. சென்னை பெருநகர தொடர்வண்டி நிறுவனத்தில் இப்போது அனைத்து நிலைகளிலும் சுமார் 3000 பேர் பணியாற்றுகின்றனர். பெருநகரத் தொடர்வண்டித் திட்டத்தின் முதல் கட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது, இந்த எண்ணிக்கை 5000 ஆக உயரக்கூடும்.

தரம் கெடும் அபாயம்
இவர்களில் சில நூறு பேர்களைத் தவிர, மீதமுள்ள அனைவரும் ஒப்பந்தப் பணியாளர்கள் தான். இவர்களுக்கு குறைந்த அளவில் தான் ஊதியம் வழங்கப்படுகிறது; ஊதியம் தவிர வேறு பயன்கள் எதுவும் இவர்களுக்கு தரப்படுவதில்லை. இவர்களுக்கு வழங்கப்படுவதை விட குறைவான ஊதியத்தில் யாரையும் பணியமர்த்த முடியாது என்ற நிலையில், இயக்கப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதால் இயக்கச் செலவுகள் எந்த வகையிலும் குறையாது. அதேநேரத்தில் இயக்கப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால் வேறு விதமான பாதிப்புகள் தான் ஏற்படும்.

பணியாளர்கள் வேலை பறிபோகும்
இயக்கப்பணிகளை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் அதன் லாபத்தை அதிகரிப்பதற்காக மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கையை 40 முதல் 50% என்ற அளவில் குறைக்கும். இதனால் தொடர்வண்டிகள் பராமரிப்பு, தொடர்வண்டிகள் இயக்கம், தொடர்வண்டி நிலையப் பராமரிப்பு உள்ளிட்ட அனைத்திலும் தரம் குறையும். இதற்கெல்லாம் மேலாக, இயக்கப்பணிகளை மேற்கொள்ளும் நிறுவனம் புதிய பணியாளர்களை அடிமாட்டு ஊதியத்தில் தான் தேர்வு செய்யும் என்பதால், சென்னை பெருநகர தொடர்வண்டி நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 5000 பணியாளர்கள் வேலை இழக்க வேண்டியிருக்கும்.

கேள்விக் குறியாகும் பாதுகாப்பு
பெருநகரத் தொடர்வண்டி சேவைகளைப் பொறுத்தவரை பாதுகாப்பு என்பது மிக முக்கியமானதாகும். இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளின் தாக்குதல் இலக்குகளில் விமான நிலையங்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பது பெருநகர தொடர்வண்டிகள் ஆகும். அதனால் இந்த தொடர்வண்டிகள் மிகவும் பாதுகாப்பான சூழலில் இயக்கப்பட வேண்டும். தெற்கு தொடர்வண்டி நிர்வாகத்தில் நேரடி கட்டுப்பாட்டில் இயக்கப்படும் சென்னை புறநகர் தொடர்வண்டியை கடந்த 29.04.2009 அன்று சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்திலிருந்து கடத்திச் சென்ற பயங்கரவாதி ஒருவன் வியாசர்பாடி தொடர்வண்டி நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்குத் தொடர்வண்டி மீது மோதி விபத்துக்கு உள்ளாக்கினான். இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன் மிகப்பெரிய அளவில் சேதமும் ஏற்பட்டது.

தரமற்ற சேவைக்கு வாய்ப்பு
அரசு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் போதே இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், இயக்கப்பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால் இதைவிட மோசமான தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் பெருநகரத் தொடர்வண்டிகள் தனியார் நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன. அங்கு சேவை மிகவும் மோசமாக உள்ளது. மாறாக, அரசு நிறுவனங்களால் இயக்கப்படும் தில்லி மற்றும் கொல்கத்தா பெருநகர தொடர்வண்டி சேவைகள் மிகவும் சிறப்பாகவும், பயணிகளுக்கு வசதியாகவும், கட்டணம் குறைவாகவும் இருப்பதை சென்னை பெருநகர தொடர்வண்டி நிறுவனம் நினைவில் கொள்ள வேண்டும்.

செலவு எப்படி குறையும்
சென்னை பெருநகர தொடர்வண்டி சேவை தொடங்குவதற்கு முன்பே அதை தனியாரிடம் ஒப்படைக்க 2012-ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டது. வியோலியா டிரான்ஸ்போர்ட், கியோலிஸ், செர்க்கோ ஆகிய 3 பன்னாட்டு நிறுவனங்கள் இதற்கான ஒப்பந்தங்களைப் பெற போட்டியிட்டன. ஆனால், இயக்கப்பணிகளை தனியாரிடம் ஒப்படைத்தால் செலவு அதிகரிக்கும் என்பதால் அத்திட்டம் கைவிடப்பட்டது. அவ்வாறு இருக்கும் போது இப்போது மட்டும் இயக்கப்பணிகளை தனியாரிடம் ஒப்படைத்தால் இயக்கச் செலவு குறையும் என சென்னை பெருநகர தொடர்வண்டி நிறுவனம் கூறுவது மிகவும் விந்தையாக உள்ளது.

பாதகமே அதிகம்
சென்னை பெருநகர தொடர்வண்டிகளின் இயக்கப்பணிகளை தனியாரிடம் ஒப்படைத்தால் ஏற்படும் சாதகங்களை விட பாதகங்களே அதிகம் என்பதால் அந்த முடிவை கைவிட வேண்டும். பெருநகர தொடர்வண்டி சேவையை விரிவுபடுத்துவதன் மூலம் வருவாயை அதிகரிக்கவும், தொழிலாளர்கள் அனைவருக்கும் பணி நிலைப்பு வழங்கவும் பெருநகர தொடர்வண்டி நிறுவனம் முன்வர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications