என் 60ஆவது திருமண நாளுக்கு அன்புமணி வராதது மனவருத்தம்தான்- பாமக ராமதாஸ் உருக்கம்
திண்டிவனம்: எனது 60ஆவது திருமண நாள் நிகழ்ச்சிக்கு அன்புமணி வராதது வருத்தமாக இருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் உருக்கமாக தெரிவித்துள்ளார். அது போல் 2026 தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் சமயத்தில் பாமக பொதுக் குழு கூட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், எல்லா பிரச்சினைக்கும் ஒரு முடிவு உண்டு. அந்த முடிவு இன்னும் வரவில்லை. பாமக விவகாரத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

என்னால் தொடங்கப்பட்ட பாமகவை வளர்த்தது நான்தான். எனவே என் மூச்சு வரை நானே தலைவர். கலைஞர் கருணாநிதி போல் பாமகவின் தலைவராக என் மூச்சு வரை நானே செயல்படுவேன். ஸ்டாலின் பாணியில் அன்புமணி செயல் தலைவராக இருத்தல் வேண்டும்.
செயல் தலைவர்
செயல் தலைவர் என்பது சிறந்த பொறுப்பு, அதை ஏற்க அன்புமணி மறுக்கிறார். கலைஞர் கருணாநிதி திமுக தலைவராக இருந்த போது ஸ்டாலின் தரப்பில் இருந்து ஒரு முணுமுணுப்பு கூட வரவில்லை. பாமக தலைவராக கொஞ்ச நாளைக்கு இருக்க வேண்டும் என என் மனதில் தோன்றியது.
60ஆவது திருமண நாள்
மக்களுக்காக வாழ்ந்த தலைவர்களை கொச்சைப்படுத்துவது தவறானது. கருத்துகளில முரண்பாடுகள் இருந்தாலும் தலைவர்களை கொச்சைப்படுத்தக் கூடாது. எனது 60ஆவது திருமண நாளுக்கு அன்புமணி வராதது எனக்கு வருத்தம் அளிக்கிறது. 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்கும் போது பாமக பொதுக் குழு கூட்டம் நடத்தப்படும் என ராமதாஸ் தெரிவித்தார்.
தைலாபுரம்
திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் புதியதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ராமதாஸ் பேட்டி
இதையடுத்து நேற்று ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியிருப்பதாவது: எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் தீர்வு இருக்கத்தான் செய்யும் அப்படியாக ஒரு தீர்வு வரும். பாமகவை தொடர்ந்து 46 ஆண்டு காலமாக கட்சி, சங்கம் இரண்டையும் வழிநடத்தி வருகிறேன்.
34 துணை அமைப்புகள்
சங்கத்தின் தலைவராக பூ.அருள்மொழியும் கட்சியின் தலைவராக நானும் இருக்கிறேன். மேலும் 34 துணை அமைப்புகளை உருவாக்கியுள்ளேன். அதற்கெல்லாம் அவர்களுக்கு தொடர்ந்து வழிகாட்டி வருகிறேன். இந்த 34 அமைப்புகளும் திறம்பட செயல்பட இனி அவர்களை உற்சாகப்படுத்தி அவர்களுடைய பணியைத் தொடரச் செய்ய வேகமாக அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்கப் போகிறோம்.
வெற்றி
அந்தத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை நாம் பெற போகிறோம். இங்கே வந்துள்ள மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள், மாநில பொறுப்புகள் எல்லோருக்கும், இங்கே வந்துள்ளவர்களுக்குத்தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படும்.
கூட்டணி
கூட்டணியை பற்றி இப்போது உங்களுக்கு சொல்லக் கூடாது. கூட்டணி முடிவாகிவிட்டதா என கேட்பீர்கள். ஆனால் கூட்டணி முடிவாகவில்லை. நல்ல கூட்டணி, வித்தியாசமான கூட்டணி, வெற்றி பெறுகிற கூட்டணியாக இருக்கும்.
சட்டசபை அதிகாரங்கள்
இங்கு வந்துள்ளவர்கள்தான் தேர்தலில் போட்டியிட நான் தேர்ந்தெடுப்பேன். இங்கு வந்துள்ளவர்கள்தான் எதிர்கால சட்டசபை உறுப்பினர்கள். ஏனென்றால் எனக்கு எல்லா அதிகாரங்களும் உண்டு. அதனால்தான் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று நல்லவர்களையும் வல்லவர்களையும் எம்எல்ஏவாக்குவேன் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications