மீனவர்கள் படகுகள் பறிப்பு, பெட்ரோல் விலை உயர்வு… என்ன செய்யப் போகிறார் ஜெ.? ராமதாஸ் கேள்வி

இது தொடர்பாக இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை, காரைக்கால் பகுதி மீனவர்கள் 34 பேரை கடந்த ஜூலை 30 ஆம் தேதி சிங்களக் கடற்படை கைது செய்தது. அவர்களை இம்மாதம் 4 ஆம் தேதி இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்த போதிலும், அவர்களுக்கு சொந்தமான 5 படகுகளை விடுவிக்க மறுத்துவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் தங்களின் படகுகளை மீட்பதற்காக, விடுதலையான பிறகும் தாயகம் திரும்பாமல், இலங்கையில் இருந்தவாறே போராடினர்.
ஒரு கட்டத்தில் இப்பிரச்சினையில் தலையிட்ட இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரிகள், படகுகளை மீட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்த பிறகே 34 மீனவர்களும் கடந்த 22 ஆம் தேதி தாயகம் திரும்பினர். தங்களின் விசைப்படகுகள் விரைவில் கிடைத்துவிடும் என்று அவர்கள் நம்பிக் கொண்டிருந்த நிலையில் தான் அவர்களின் படகுகள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட செய்தி வந்துள்ளது.
இதுவரை தமிழக மீனவர்களை தாக்கியும், சுட்டுக்கொன்றும் கொடுமைப்படுத்தி வந்த சிங்களக் கடற்படை, இப்போது படகுகளை பறிக்கும் புதிய பாதகத்தைத் தொடங்கியிருக்கிறது. மீனவர்களின் பிழைப்புக்குத் தேவையான படகுகளை பறித்துக் கொண்டு அவர்களை விடுதலை செய்வது, உயிரைப் பறித்துக் கொண்டு நடைபிணமாக அனுப்புவற்கு ஒப்பானதாகும்.
தமிழக மீனவர்களின் படகுகளை பறித்து வைத்துக் கொண்டு தர முடியாது என்று மறுப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடுக்கும் செயலாகும். மீனவர்களின் நலன்களை பாதுகாக்கும் கடமை தமிழக அரசுக்கு உள்ளது. மீனவர் பிரச்சினை பற்றி கடந்த 27 மாதங்களில் 27 முறை பிரதமருக்கு கடிதம் எழுதியும் பயனில்லை என்பதை முதலமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். இனியாவது அவர் தமது அணுகுமுறையை மாற்றிக்கொண்டு, அனைத்துக்கட்சித் தலைவர்களுடன் பிரதமரை நேரில் சந்தித்து இலங்கையை கண்டிக்கும்படி வலியுறுத்துவாரா? அல்லது 28 ஆவது கடிதத்தை எழுதிவிட்டு அமைதியாகிவிடுவாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இந்த இரு வினாக்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் சரியாக பதிலளித்து, மீனவர்களின் நலனை பாதுகாக்காவிட்டால் வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தங்களின் வாக்குகள் மூலம் சரியான பதில் தருவது உறுதி என்று கூறியுள்ளார்.
பெட்ரோல் விலை உயர்வு
பெட்ரோல் விலையை மீண்டும் ஒருமுறை லிட்டருக்கு ரூ.2.07 உயர்த்தி ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. சென்னையில் நேற்றுவரை ரூ.77.48 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை இன்று ரூ.79.55 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் தொடங்கி இன்று வரையிலான மூன்றரை மாதங்களில் பெட்ரோல் விலை 7 தவணைகளாக மொத்தம் ரூ.13.65 உயர்த்தப்பட்டிருக்கிறது. இது இதுவரை இல்லாத விலை உயர்வாகும்.
ஒவ்வொரு முறை பெட்ரோல், டீசல் விலை உயரும் போதும் அதனால் ஏழை & எளிய மக்கள் பாதிக்கப்படுவதாக கூறும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அந்த பாதிப்பை போக்க எதையும் செய்யவில்லை.
கடந்த ஜூன் மாதத்திற்கு பிறகு பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதால் மட்டும் தமிழக அரசுக்கு லிட்டருக்கு ரூ. 2.85 கூடுதலாக வரி வருவாய் கிடைக்கிறது. ஜெயலலிதா நினைத்தால், கூடுதலாக கிடைக்கும் வரி வருவாய் தேவையில்லை என்று கூறி பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 3 வரை குறைக்க முடியும். ஏழை மக்களின் நலனில் ஜெயலலிதாவுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால் மதிப்பு கூட்டு வரியை குறைத்து அதன் மூலம் பெட்ரோல் விலையை குறைக்க முன்வர வேண்டும்எனவும் ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications