நல்ல வேளை, வைகோ கூட்டணியில் எங்களைச் சேர்க்கலை.. "நோஸ் கட்" கொடுத்த ராமதாஸ்!
சென்னை: மக்கள் நல கூட்டியக்கத்தில் பாமகவைச் சேர்க்காமல் விட்டதற்கு ரொம்ப நன்றி என்று கூறி நக்கலடித்துள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
சென்னை மாவட்ட பாமக செயற்குழு கூட்டம் தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட ராமதாஸ் வரும் சட்டசபைத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி சகிதம் செய்தியாளர்களிடம் பேசினார் ராமதாஸ். அப்போது அவர் கூறுகையில்,
சென்னையில் அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சென்னைக்கு மட்டும் தனியாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் திட்டம் உள்ளது.
வைகோ தலைமையில் அமைந்துள்ள மக்கள் நல கூட்டியக்கத்தில் பாமக, பாஜக கட்சிகளுக்கு இடமில்லை என திருமாவளவன் பேசியுள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தை முன்னேற்ற கூடிய செயல்திட்டம் அன்புமணி கையில் இருக்கிறது. அவருக்கு மக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது என்றார் ராமதாஸ்.
சென்னையில் ரூ. 1000 கோடிக்கு சசிகலா தரப்பு தியேட்டர்களை வாங்கியுள்ளதாக கூறப்படுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ஜெயலலிதா தரப்பு இன்னும் கடலை மட்டும்தான் வாங்கவில்லை. அவர்கள் வாங்காமல் விட்டதுதான் என்ன என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார் ராமதாஸ்.