காரைக்குடி பள்ளியில் மாணவர்கள் கொண்டாடிய ரம்ஜான்!
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ரமலான் பண்டிகை செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காரைக்குடி கல்லூரி சாலை பள்ளிவாசல் ஜமாத் தலைவர் நைனா முகமது இவ்விழாவிற்கு தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஆ. பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார்.

காரைக்குடி ரோட்டரி பேர்ல் சங்கமம் தலைவர் நாச்சியப்பன், செயலாளரும் மற்றும் சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் விலங்கியல் துறை தலைவருமான நாவுக்கரசு வாழ்த்துரை வழங்கினார்கள். பைத்துல்மால் மையத்தின் செயலர் ஜமால் ராஜா, சிக்ரி ஓய்வு அறிவியலாளர் டாக்டர். ஜமாலுதீன் மற்றும் காரைக்குடி ரோட்டரி பேர்ல் சங்கமத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் ரமலான் விழாவில் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் காஜா மைதீன் ரமலான் பண்டிகை கூறித்து சிறப்புரை ஆற்றினார்கள். தனது உரையில் மாணவர்களுக்கு ரமலான் பண்டிகையின் நோக்கம், நோன்பின் முக்கியத்துவம், தொழுதலின் அவசியம் குறித்தும், நம்மால் இயன்றவரை இல்லாதோருக்கு உதவுதல், பிறருடன் இணக்கமான உறவை ஏற்படுத்தி சகோதரத்துவத்தை வளர்த்தல், சமாதானத்தை கடைபிடித்தல், சுய ஒழுக்கம், நல்ல பழக்கவழக்கங்கள் போன்ற நற்ப்பண்புகளை எடுத்துக் கூறினார்கள்.

மாணவர்கள் ரமலான் விழாவில் இஸ்லாம் இறை வாழ்த்து வாசித்தும், பண்டிகை கொண்டாடும் நோக்கம் குறித்து, பாட்டு பாடியும், குரான் ஓதியும், நடனம் ஆடியும் போன்ற பல்வேறு கலை நிகழ்சிகளை நடத்தி காண்பித்தனர். விழாவில் காரைக்குடி ரோட்டரி பேர்ல் சங்கமத்தின் பயிற்றுனர் முத்துக்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை பட்டதாரி ஆசிரியர் மீனாட்சி தொகுத்து வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் கோமதி செய்திருந்தார்.












Click it and Unblock the Notifications