தொடரும் இலங்கை கடற்படை காலித்தனம்... 4 மீனவர்களை சிறைபிடித்ததை கண்டித்து 24ம் தேதி ரயில் மறியல்
ராமேஸ்வரம்: இலங்கைக் கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்களைக் கைது செய்து வருவதைக் கண்டித்து வருகிற 24ம் தேதியன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
45 நாள் மீன்பிடி தடைக்காலம முடிந்து கடந்த 29ம் தேதியில் இருந்து தான் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். முதல் நாளிலேயே மீனவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு இலங்கை மன்னார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் 3-வது முறையாக ராமேஸ்வரத்தை சேர்ந்த ஒரு படகுடன் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதனால் மீனவர்கள் பெரும் கொதிப்படைந்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே நூற்றுக்கணக்கான படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 4 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் மீனவர்களை விரட்டியடித்தனர்.
இதனால் செய்வதறியாமல் மீனவர்கள் திகைத்த நிலையில் அவர்களது படகுகளில் இறங்கி கடலில் விரித்து இருந்த வலைகளை அறுத்து கடலில் வீசி எறிந்தனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகில் இருந்த அபுதாகீர், முருகன், ஆரோக்கியம், அப்துல்கரீம் ஆகிய 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். அவர்களது படகும் சிறை பிடிக்கப்பட்டது.
4 மீனவர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் உள்ள கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரித்தனர். பின்னர் அவர்கள் ஊர்காவல்துறை கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு விசாரணை நடத்திய மீனவர்கள் 4 பேரையும் வருகிற 16ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த செயலால் ராமேஸ்வரம் மீனவர்கள் பெரும் கொதிப்படைந்துள்ளனர். ரயில் மறியல் போராட்டத்தை அவர்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் சங்கத் தலைவர் தேவதாஸ் கூறுகையில், 45 நாள் தடை காலம் முடிந்து இதுவரை 3 நாட்கள் மட்டுமே மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வந்துள்ள நிலையில் இலங்கை கடற்படை 15 மீனவர்களை கைது செய்துள்ளதுடன் 3 படகுகளை பறிமுதல் செய்துள்ளது. கச்சத்தீவை மீட்க வேண்டும் என மத்திய அரசை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி வருகிறார். கச்சத்தீவை மீட்டால் அதை விட பெரிய மகிழ்ச்சி எங்களுக்கு வேறு எதுவும் இல்லை.
நமது மீனவர்களை மத்திய அரசு இந்திய குடிமகனாகவே நினைக்கவில்லை. மீனவர்கள் பிரச்சினை குறித்து வருகிற 8ம் தேதி சென்னை சென்று மீன்துறை அமைச்சர், செயலாளரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க முடிவு செய்துள்ளோம். தமிழக முதல்வரையும் நேரில் சந்தித்து மீனவர்களின் பிரச்சினை பற்றி தெரிவிக்க அனுமதி கேட்டுள்ளோம்.
பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மீனவர்களின் கஷ்டத்தை பற்றி தெரிவித்து மனு கொடுக்க அனுமதி பெற்றுத் தர வேண்டும் என தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேட்டுள்ளோம். இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையால் மீனவர்களின் வாழ்வதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றது. மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசு அலட்சியம் காட்டி வருகிறது. இதனால் தான் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் வருகிற 24-ந் தேதி அனைத்து மீனவர்களும் திரண்டு ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது உறுதி. இதில் எந்த மாற்றமும் இல்லை என்றார் அவர்.