கச்சதீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொடூர தாக்குதல்!
கச்சதீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.
ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் மீனவர்களின் படகுகள் சேதமடைந்து உள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் ஓகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் மீனவ மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். கடலில் மீன் பிடிக்கச்சென்ற மீனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், இரு வாரங்களுக்குப் பிறகு ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 11ம் தேதி கடலுக்கு மீண்டும் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களின் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி விரட்டி அடித்தது. இது குறித்து கடலோர காவற்படையிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து நேற்று ராமேஸ்வரம்,பாம்பன் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீதும், படகுகள் மீதும் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த தமிழக மீனவர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக கிளம்ப படகுகளை இயக்கி உள்ளனர். அப்போது சில படகுகளுக்குள் புகுந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர்.
இன்று காலை கரை திரும்பிய மீனவர்கள் இலங்கை கடற்படையினர் தங்கள் படகுகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 50க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் படகுகளில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.