ராணிப்பேட்டை பள்ளியில் கேக் சாப்பிட்ட 7 வயது சிறுவன்! முகம், வயிறு வீங்கி பலி! நடந்தது என்ன?
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவன் ஒருவன் கேக்கை சாப்பிட்டதால் முகம், கண், வயிறு வீங்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே கேக்கை கொண்டு சென்ற அக்கா, அதை சாப்பிட வேண்டாம் என தடுத்து நிறுத்துவதற்குள் அந்த சிறுவன் கேக்கை சாப்பிட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த தாமரைப்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி தீபலட்சுமி. இவர்களுக்கு 8 வயதில் மகள் சன்விதா, 7 வயதில் மகன் மிதுன் உள்ளனர்.

இவர்கள் இருவருமே காவனூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். மிதுன் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். அவர் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுள்ளான். அங்கு மிதுன் உணவு இடைவேளையில் வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்குச் செல்ல முயன்றான்.
அப்போது திடீரென மிதுனின் முகம், கண், வயிறு பகுதிகள் திடீரென வீங்கத் தொடங்கியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், உடனடியாக மிதுனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இதனிடையே பெற்றோருக்கு தகவல் சொல்லியதில் அவர்கள் பதறி அடித்துக் கொண்டு தனியார் மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கிருந்து குழந்தையை ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதை கேட்டதும் பெற்றோரும் குழந்தைகளும் கதறி அழுதனர். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீஸார், பள்ளி நிர்வாகத்திடமும் பெற்றோரிடமும் விசாரணை நடத்தினர். அதில் சிறுவன் மிதுன், உணவு இடைவேளைக்கு முன்பு 11.30 மணியளவில் வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட கேக்கை உட்கொண்டாராம்.
அதன் பிறகு உணவு இடைவேளையின் போது மிதுன் இட்லி சாப்பிட்டார். அதன் பின்னர்தான் அவரது முகம் வீங்கியதாக தெரிகிறது. சிறுவன் சாப்பிட்ட கேக், கடந்த 5 நாட்களுக்கு முன்பு தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள பேக்கரியில் வாங்கியதாம். அதை இவர்கள் பிரிட்ஜில் வைத்திருந்து அதை உணவு இடைவேளியின் போது மிதுனும் அவனது அக்கா சன்விதாவும் சாப்பிட்டு வந்தது தெரியவந்தது.
சிறுவனின் அக்காவிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திய போது, "நான் பள்ளியில் அந்த கேக்கை சாப்பிட எடுத்த போது அதில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அதை நான் சாப்பிடாமல் தூக்கி எறிந்துவிட்டேன். பின்னர் தம்பியை சாப்பிடாமல் தடுக்க அவனது வகுப்புக்குச் சென்ற போது அவன் ஏற்கெனவே சாப்பிட்டுவிட்டதாக கூறினான்" என்றார் அந்த சிறுமி.
இதுகுறித்து அவர்கள் கேக் வாங்கிய பேக்கரியிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறுவனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தால்தான் அவனது இறப்புக்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர். பொதுவாக எந்த உணவு பொருளையும் ப்ரிட்ஜில் வைத்து சாப்பிடவே கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதிலும் 5 நாட்களுக்கு முன்னர் இவர்கள் கேக்கை வாங்கியுள்ளனர். அந்த கேக்கை அந்த பேக்கரி, எப்போது தயார் செய்தது என தெரியவில்லை.
கேக்கை வாங்கினால் ஒரு நாள்தான் வைத்திருக்க வேண்டும். அதற்கு மேல் வைத்திருந்தால் அது உடலுக்கு கேடு விளைவிக்கும். மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்திவிடும்.












Click it and Unblock the Notifications