கோவில் விழாவுக்கு மத்தியில் ஒரு கோர்ட்... ராசிபுரம் விநோதம்!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் இரா.புதுப்பட்டியில் உள்ள அருள்மிகு துலுக்க சூடாமணியம்மன் திருக்கோவிலில் தேரோட்டம் வெகுசிறப்பாக நடந்தது. அப்போது, ஆங்கிலேயர் காலம் முதல் விழாவின் போது கோவிலில் நடைபெற்று வரும் இரண்டு நாள் குற்றவியல் நீதிமன்றம் நேற்றும், இன்றும் செயல்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இரா.புதுப்பட்டியில் இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட அருள்மிகு துலுக்க சூடாமணியம்மன் திருக்கோவிலில் திருத்தேர்ப் பெருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினந்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரில் அருள்மிகு துலுக்க சூடாமணியம்மன் எழுந்தருள மஹா தீபாராதனை, பூஜைகள் நடந்தன. பின்னர் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஏராளமான பக்தர்கள் தேரினை வடம்பிடித்து இழுத்து வந்தனர். தேரோட்டம் நடந்தபோது பக்தர்கள் உருளுதண்டம் போட்டு வழிபட்டனர்.
விழாவில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.பி.ராமலிங்கம், பி.ஆர்.சுந்தரம், நாமக்கல் வட்ட ஆட்சியர் வ.தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டு தேர் வடம்பிடித்து இழுத்தனர். ராசிபுரம் சுற்றுவட்டார பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே கோவில் வளாகத்தில் ராசிபுரம் நீதிமன்றம் சார்பில் 2 நாள் குற்றவியல் நீதிமன்றம் தொடங்கியது. ஆங்கிலேயர் காலத்தில் விழாவின்போது ஏற்படும் சிறு,சிறு வழக்குகளுக்கு நீதிமன்றம் அமைக்கப்பட்டு உடனடித் தீர்வு காணப்பட்டது. அப்போது சேலத்தில் மட்டுமேநீதிமன்றம் இருந்ததால் இங்கு குதிரையில் வந்து நீதிமன்றப் பணிகளை நடத்தினர்.
இன்றைய காலத்தில் குற்றச் சம்பவங்கள் இல்லையென்றாலும் கூட, பாரம்பரியாக நடந்து வரும் நிகழ்வாக இது தொடர்கிறது. ராசிபுரம் நீதிமன்றம் அங்கிருந்து தற்காலிகமாக இடம்பெயர்ந்து முழுமையாக இந்தக் கோவில் வளாகத்தில் இயங்கி பல்வேறு சிறு சிறு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
நேற்று காலையில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இன்றும் இந்த நீதிமன்றம் செயல்பட்டது. இதைப் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.