தென்காசி தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது... 57 சதவீத வாக்குகள் பதிவு
நெல்லை: நெல்லை மாவட்டம் தென்காசி தொகுதி 56 வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 57 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் தென்காசி சட்டசபை தொகுதியில் உள்ள பொன்னமரன் நடுநிலைப்பள்ளியில் எண் 56, 57 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 56வது வாக்குச்சாவடியில் மாதிரி வாக்குப்பதிவின்போது பதிவான 52 வாக்குகளை நீக்காமல் வாக்குப்பதிவை நடத்திவிட்டனர்.

வாக்குப்பதிவு முடிந்த பிறகு அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளை காண்பித்தபோது தான் இது தெரிய வந்தது. அந்த வாக்குச்சாவடிக்கான மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 972, அதில் பதிவான வாக்குகள் 592 என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தென்காசி தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் என்.டி.எஸ். சார்லஸ், அதிமுக முகவர் சின்னத்துரைப்பாண்டியன் உள்ளிட்டோர் தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேஷிடம் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த தேர்தல் ஆணையம் 56வது வாக்குச்சாவடிக்கு மே 18ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று அறிவித்தது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடந்தது.

இதில் 57 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 555 வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த முறை பதிவான வாக்குகளில் இருந்து 37 வாக்குகள் குறைவாகவே பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications