சாவில் சந்தேகம்... தந்தை அளித்த புகாரால் புதைக்கப்பட்ட சிறுமி உடலில் மீண்டும் பிரேத பரிசோதனை
ஈரோடு: மரணத்தில் சந்தேகம் என தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், புதைக்கப்பட்ட சிறுமியின் உடலைத் தோண்டி எடுத்து ஈரோடு போலீசார் பிரேத பரிசோதனை நடத்தியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கெடாரையை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (30). கார் டிரைவரான இவரது மனைவி ஷோபனா, சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர். இவர்களுடைய மகள் கிருஷ்ணபிரியா (5).
திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக மகளோடு சென்னையில் பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார் ஷோபனா. அவ்வப்போது மாமனார் வீட்டிற்குச் சென்று மனைவியையும், மகளையும் பார்த்து வந்தார் வெள்ளியங்கிரி.
இந்நிலையில், சமீபத்தில் தனது தந்தை இறந்து விடவே மகளுடன் வெள்ளியங்கிரியின் வீட்டுக்கு வந்த ஷோபனாவிற்கு மாமனார் - மாமியாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், நம்பியூர் பகுதியில் வாடகை வீட்டில் தாய் மற்றும் மகளுடன் ஷோபனா குடியேறினார்.
கடந்த 8-ந் தேதி மாலை குழந்தை கிருஷ்ணபிரியாவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு சுயநினைவை இழந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக குழந்தையை கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார் ஷோபனா. அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
அதன்பிறகு வெள்ளியங்கிரியின் வீட்டுக்கு குழந்தையின் உடல் கொண்டுசெல்லப்பட்டு இறுதி சடங்குகள் செய்து, கெடாரை-இச்சிப்பாளையம் செல்லும் வழியில் உள்ள சுடுகாட்டில் புதைக்கப்பட்டது.
இந்நிலையில் கிருஷ்ணபிரியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வெள்ளியங்கிரி போலீசில் புகார் அளித்தார். அந்த மனுவில்,‘நன்றாக விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை திடீர் என்று இறந்துவிட்டது. என்ன காரணம் என்று தெரியவில்லை? என்னுடைய மகள் சாவில் சந்தேகம் உள்ளது. அதனால் புதைக்கப்பட்ட உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யவேண்டும்‘ என அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், தாசில்தார் அசோக்குமார் மற்றும் வெள்ளியங்கிரி, ஷோபனா ஆகியோர் முன்னிலையில் சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த கிருஷ்ணபிரியாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
பிரேத பரிசோதனைக்காக கோவையில் இருந்து வந்திருந்த தடயவியல் துறை சட்டம் சார்ந்த மருத்துவர்கள் ஜெயசிங், பேரானந்தம் ஆகியோர் சிறுமியின் உடலில் இருந்து கல்லீரல், சிறுகுடல், இதயம் உள்ளிட்ட உறுப்புகளின் மாதிரிகளை சேகரித்தார்கள்.
பின்னர் உறுப்புகள் ரசாயன சோதனைக்காக கோவை கொண்டு செல்லப்பட்டது. சோதனையின் முடிவு வந்த பிறகே சிறுமியின் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications