Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உண்மையின் விஸ்வரூபம் என்றும் உண்மையே!

Subscribe to Oneindia Tamil

சட்டம் அதை மீண்டும் ஒருமுறை ஆணி அறைந்து நிரூபித்து உள்ளது. இருபத்தொரு வருட நீண்ட பயணம். வந்த தீர்ப்பு எதோ ஒரு அணி அதிர்ந்து, மறுபக்கம் கூடிக்களித்து இன்புற்று இருக்க தந்தது அல்ல. இருவர்க்கும் பொதுவாக சம்மட்டி அடி கொண்டு சட்டம் வழங்கிய ஒருமித்த பரிசு. மறைந்த முதல்வர் இன்று இருந்திருந்தால் சட்டம் வழங்கிய இறுதித் தீர்ப்பு பக்கங்களிலும் அவரே முதல்வர். எனவே, கிடைத்த தீர்ப்பில் மற்றவர் குளிர் காய நினைத்து இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தால், அவர்களின் ஆழ்ந்த அரசியல் அறிவிற்கு நம் அனுதாபங்கள்.

இந்த நொடி, வெள்ளை சட்டையில் எந்த ஓரத்தில் கரை உள்ளது என்று தேடுவது அறிவார்ந்த வேலை அல்ல. மொத்த சட்டையும் சலவை செய்து வெள்ளாவியில் வெளுக்கும் நேரமிது. பொது மக்களின் ஒரே எதிர்பார்ப்பு.. அவர்கள் அடிப்படை தேவையை பூர்த்தி செய்யும் ஒரு கறையில்லா சேவகன். அவ்வளவே.!

Reader's pick on TN Politics

இதன் வீரியம் தெரியாமல் எங்கள் பக்கம் உண்மை, நாங்கள் வேறு அணி, சிங்கங்கள் என்று, அரசியல் ஆளுமையின் அடிவேர் அறியாமல் அர்த்தமற்று திரிந்தால், கையில் வைத்த மை இன்னும் காயாமல் இருக்கும் மக்கள் மீண்டும் கரம் நீட்ட தயங்க மாட்டார்கள் என்பதை, தற்காலிக அல்லது வரப்போகும் ஆளுமை நினைவில் கொள்ள வேண்டும். மெரினா "ஏறு தழுவல்" வரலாறு - பொதுமக்கள் விழிப்புணர்வுக்கு ஒரு பானை சோற்றுப்பதம்.

நடக்கும் நிகழ்வுகள் எதுவும் - "புதிய மொந்தையில் பழைய கள்" கதையன்று. இன்றைய அறிவியல் நகர்வில், உங்கள் ஒவ்வொரு சிறு சிறு செயலும் உன்னிப்பாக கண்காணிக்கபடுகிறது. மக்களுக்கு உண்மையாக இருக்க மறுத்தால் உங்கள் நிறம் உரித்து காட்டப்படும் என்பதை மறக்க வேண்டாம். யாரோ எப்போதோ செய்த பிழை...பொது வாழ்க்கை என்பது பதவி, பணம், அதிகாரம் மற்றும் ஆளுமை அடர்ந்து காய்க்கும் ஆலமரம் என்ற தவறான நோக்கு. அது தொன்று தொட்டு வழி மாறாமல் இன்றும் நம்மை பின்தொடர முயற்சிக்கிறது.

"தான்" என்ற அகந்தை விட்டு மக்கள் சேவையை மட்டுமே ஆழமாய் மனதில் விதைத்து நமக்கு முன் எடுத்துக்காட்டாய் பயணித்த எளியவர் பலர் இங்கு உண்டு. அவர்களை போலவே இன்றும் உங்களில் ஒருவர் அடையாளமற்று இருக்கலாம். அவர்களை கண்டெடுப்பது உங்கள் பணி. அவர்களின் நெஞ்சுர ஆழம் அளக்க முடிந்தால் அதை செய்யுங்கள். நம் பார்வையை அகலமாகவும் கூர்மையாகவும் நாம் தான் ஆக்கி கொள்ள வேண்டும். களை எடுப்பது என்பது கழனிக்கு மட்டும் பொதுவன்று.

தமிழன் விருந்தோம்பலின் முன்னோடி. ஆனால், அதன் ஆழம் காலப்போக்கில் பலமுகம் கொண்டு அடுத்தவர் ஆராதித்தலிலும் தேவையற்று போய் நின்று விட்டது. பின் வந்த பலரும் அதற்கு நன்கு அடியுரம் இட்டு வளர்த்து விட்டனர். அது நடிகரானாலும், அரசியல் தலைவர் ஆனாலும் ஒன்று தான். நமக்கு பிடித்துவிட்டால் பிறகு நேராக "சூடம்" தான். இந்த அர்த்தமற்ற போக்கு...தரம் தாழ்த்தும் ஆராதனை பார்வை, உங்கள் ரத்த ஓட்டத்தில் நீங்களே விஷம் கலக்கும் கொடிய செயல். உங்கள் தலைமுறையும் அடுத்து வரும் தலைமுறையின் கூரிய அறிவையும் மழுங்கடிக்கும் ஆணிவேர் இங்கு தான் துவங்குகிறது. இதில் தேவையற்று பாயும் ரத்த ஓட்டத்தை நிறுத்துங்கள்.

உற்று நோக்குங்கள். எந்த நடிகராவது அவர்களது வாரிசுகளை அடுத்தவரை ஆராதிக்க, "சூடம்" ஏற்ற அனுமதிக்கிறார்களா? எந்த அரசியல் தலைவராவது அவர் பெற்ற மக்களை அடுத்தவனுக்கு பல்லாக்கு தூக்க சொல்கிறார்களா? உங்களுக்கு மட்டும் ஏன் இந்த வெறி? நடிகரின் பணி நடிப்பது மட்டுமே. நன்கு நடிப்பதோடு அவர் வேலை முடிந்தது. உங்களுக்கு அவர் நடிப்பு

பிடித்தால், பாராட்டி அடுத்த வேலை பார்க்க கடந்து செல்லுங்கள். உங்கள் பாதை கடக்க எதற்கு அவர்கள் கால்கள்? அதேநேரம், அவர்கள் களம் மாற நினைக்க அவர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. நீங்கள் உங்கள் வழியில் பயணிப்பது போல் அவர்களும் பயணிக்கட்டும். அவர்களுக்கான பொதுவாழ்க்கை கதவு என்றும் திறந்தே இருக்கும்.

அரசியல் தலைவனின் பணி மக்கள் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமே. உங்கள் தேவையை பூர்த்தி செய்தால் அவர் முதுகில் ஆசிரியராய்,சகோதரராக தட்டி கொடுங்கள். அதற்காக அவருக்கு கர்வம் தலைக்கேறும் செயலை நீங்கள் செய்ய தேவை இல்லை. அப்படி நீங்கள் ஆராதிக்க உலகில் இருவர் உண்டு. உங்களை பெற்றவர்கள்.!

நாளை நாங்கள் தான் வெல்லும் அணி என்று தற்காலிக முதல்வரோ அல்லது மற்றவர்களோ வருவார்கள். அவர்கள் வரட்டும். அகன்ற வழி விடுங்கள். நமக்காக சமூக சேவை செய்ய துடிக்கிறார்கள் (?!). வரவேற்போம். ஆனால் உங்கள் குரலையும், பார்வையையும் உயர தூக்கி உன்னிப்பாக நோக்குங்கள். கண்காணியுங்கள். அவர்கள் பணியில் குறை இருந்தால், நீங்கள் விரும்பியது விட்டு வேறு பாதை பயணித்தால் உடனே சுட்டிக்காட்டவும், தேவைப்பட்டால் உங்கள் விரலை மீண்டும் கரை ஆக்கவும் தயங்க வேண்டாம்.

மீண்டும் ஒருமுறை...அவர்களுக்கு "நீங்கள்" கொடுக்கும் ஒரே பணி...உங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமே. அதற்கான சம்பளம் உங்கள் வரிப்பணத்தில் அரசாங்க வழங்கும்.

விழித்திரு தமிழா.!

- மாணிக்கம் விஜயபானு, ஆஸ்டின். டெக்சாஸ்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+