மக்களாட்சியின் நான்கு தூண்களின் ஆரோக்கியத்தை மீட்டெடுப்போம்- கருணாநிதி
சென்னை: மக்களாட்சியின் நான்கு தூண்களினுடைய நல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும், ஜனநாயக - சோஷலிச - சமயச் சார்பற்ற சக்திகள் ஒன்றுபட்டு, ஆழ வேரூன்றிச் செல்வாக்கு பெறவும், நமது நாட்டின் இளைஞர்கள் எத்தகைய தியாகத்தையும் செய்ய, உறுதி மேற்கொள்ள வேண்டுமென திமுக தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று 93வது பிறந்தநாள் கொண்டாடும் கருணாநிதி, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச்செய்தி:
சட்டமன்றத் துறை, நீதித் துறை, நிர்வாகத் துறை, பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகத் துறை ஆகிய நான்கு தூண்களே மக்களாட்சி எனும் மணி மண்டபத்தைத் தாங்கிக் கொண்டிருக்கின்றன. அந்தத் தூண்கள், எத்தகைய தூய்மையான நோக்கங்களைத் தாங்கிப் பிடிப்பதற்காக உருவாக்கப்பட்டனவோ, அந்த நோக்கங்கள் இந்த நூற்றாண்டில் மிகப் பெரும் சோதனைக்குள்ளாகி, சவால்களை எதிர் நோக்கி உள்ளன.
சோதனைகளில் வென்று, புடம் போட்ட பொன்னாக மிளிர வேண்டிய அந்தத் தூண்கள், துருப்பிடிக்கத் தொடங்கிவிட்டன. அவற்றின் பெறுமானமும் (Value) சரியத் தொடங்கி விட்டது. அதற்குக் காரணம், மக்களாட்சிக்கு விரோதமான சக்திகள், நமது சமுதாய - அரசியல் கட்டமைப்பின் அனைத்துப் பகுதிகளிலும் ஊடுருவி, உருக் குலைத்து வருகின்றன என்பது தான்.
இந்த எதிர்மறைப் பாதிப்பை எப்பாடுபட்டேனும் தடுத்து நிறுத்தி, மக்களாட்சியின் நான்கு தூண்களினுடைய நல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும், ஜனநாயக - சோஷலிச - சமயச் சார்பற்ற சக்திகள் ஒன்றுபட்டு, ஆழ வேரூன்றிச் செல்வாக்கு பெறவும், நமது நாட்டின் இளைஞர்கள் எத்தகைய தியாகத்தையும் செய்ய, உறுதி மேற்கொள்ள வேண்டுமென விரும்புகிறேன்