நிவாரண பொருட்கள் வழங்க விரும்புவோர் அறிவாலயத்தில் ஒப்படைக்கலாம்: கருணாநிதி
சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்ளை வழங்க விரும்புவோர் அவற்றை அண்ணா அறிவாலயத்தில் கொண்டு வந்து ஒப்படைக்குமாறு திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கழக உடன்பிறப்புகள் தங்களால் இயன்ற அளவுக்கு உதவிகளை வழங்கிட முன்வர வேண்டுமென்று 1-12-2015 அன்று நான் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, கழகத் தோழர்கள் பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பல்வேறு அடிப்படைத் தேவையான பொருள்களை வழங்கிட முன் வந்து, அவற்றை வழங்கி வருகிறார்கள்.
மேலும் சிலர், அத்தகைய பொருள்களை எங்கே கொண்டு போய், யார் மூலமாக வழங்குவது என்று தெரியாத நிலையில் இருப்பதாக தலைமைக் கழகத்திற்கும், தனிப்பட்ட முறையிலும் தொலைபேசி வாயிலாக விசாரித்து வருவதையொட்டி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக அத்தியாவசியப் பொருள்களை உதவிட முன் வரும் கழகத் தோழர்கள், கழகத் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கொண்டு வந்து ஒப்படைத்தால், அதனைப் பெற்று விநியோகம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.