ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நாளையுடன் பிரசாரம் ஓய்வு- "டேரா" போட்ட வெளியூர்வாசிகள் வெளியேற உத்தரவு!
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது. இதைத் தொடர்ந்து வெளி ஊர்களைச் சேர்ந்தவர்கள் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 26-ந் தேதி வெளியானது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் கடந்த 3-ந் தேதி தொடங்கியது.

வேட்பாளர்கள்
இத் தேர்தலில் அண்ணா தி.மு.க. வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக மகேந்திரன் உட்பட 28 பேர் போட்டியிடுகின்றனர். பிரதான எதிர்க்கட்சிகளான தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க, தே.மு.தி.க., விடுதலைச் சிறுத்தைகள், த.மா.கா, புதிய தமிழகம், பாரதிய ஜனதா கட்சி ஆகியவை தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்துள்ளன.

சில மணிநேரம் பிரசாரம்
இடைத் தேர்தலுக்கான பிரசாரம் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல்வர் ஜெயலலிதா நேற்று முன் தினம் ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரே ஒரு நாள் மட்டும் சில மணிநேரம் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

நாளையுடன் ஓய்வு
ஜெயலலிதாவுக்காக தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது.

வெளியேற்றம்
இதைத் தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும், திருமண மண்டபங்கள், விடுதிகளில் யாரும் தங்கியிருக்கக் கூடாது என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

27-ந் தேதி வாக்குப் பதிவு
ஆர்.கே.நகர் தொகுதிக்கு உள்பட்ட இடங்கள் அனைத்தும் நாளை மாலை முதல் தீவிர சோதனைக்கு உள்படுத்தப்படும். வாக்குப் பதிவு வருகிற 27-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஜூன் 30-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் உடனே அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications