ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்... 23ம் தேதி பிரசாரம் தொடங்குகிறார் டிடிவி தினகரன்
ஆர்.கே. நகர் தொகுதியில் வருகிற 23ம் தேதி மாலை டிடிவி தினகரன் தனது பிரசாரத்தை தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதியில் வருகிற 23ம் தேதி மாலை டிடிவி தினகரன் தனது பிரசாரத்தை தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அவர் திறந்த ஜீப்பில், ஆர்.கே.நகரில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்க உள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி ஆர்.கே. நகர் தொகுதி காலியாக இருந்தது. இதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் 12ம் தேதி ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது
அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, தீபா அணி என மூன்றாக பிளவுப்பட்டுள்ளது. அதில் சசிகலா அணி சார்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளார் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். ஓ.பி.எஸ் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். தீபாவும் இந்த தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள்
எதிர்கட்சியான திமுக, புதுமுகமான மருதுகணேஷை வேட்பாளராக அறிவித்துள்ளது. பாஜக வேட்பாளராக இசையமைப்பாளர் கங்கை அமரன் போட்டியிடுகிறார். மேலும் தேமுதிக சார்பில் மதிவாணன் என்பவர் போட்டியிடுகிறார். இதனால் ஆர்.கே நகரில் 6 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
டிடிவி தினகரன் பிரசாரம்
இந்நிலையில் ஆர்.கே. நகர் தொகுதியில் வருகிற 23ம் தேதி மாலை டிடிவி தினகரன் பிரசாரத்தை தொடங்குகிறார். அன்றைய தினமே வேட்புமனு தாக்கல் செய்கிறார் தினகரன். இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. திறந்த ஜீப்பில் வீதி வீதியாக வாக்கு சேகரிக்கும் தினகரன், ஜீப் செல்ல முடியாத இடத்தில் ஆட்டோவில் சென்று வாக்கு சேகரிக்கிறார்.
அதிமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முடிவு
இதனையடுத்து எந்தெந்த பகுதிகளில் வாக்கு சேகரிப்பது தொடர்பாக நாளை மாலை அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெறும் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.சென்னை தண்டையார்பேட்டை அப்பல்லோ மருத்துவமனை அருகில் அமைக்கப்பட்டுள்ள அதிமுக தேர்தல் அலுவலகத்தை வருகிற 22ம் தேதி டிடிவி தினகரன் தொடங்கி வைக்கிறார்.
சாமி தரிசனம்
இதற்காக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த அங்கே சென்ற டிடிவி தினகரன் , அப்பகுதியில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.காமராஜ், ஆர்.பி.உதயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
50 ஆயிரம் வாக்கு வித்யாசத்தில் வெற்றி
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.கே நகர் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெறுவேன் என்று தெரிவித்தார். மேலும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிகக் 30 அமைச்சர்கள் மற்றும் 121 எம்.எல்.ஏக்கள் ஈடபட உள்ளதாக தகவல் தெருவிக்கின்றன.
உற்சாக வரவேற்பு கொடுக்க ஏற்பாடு
டிடிவி தினகரன் வாக்கு சேகரிக்க செல்லும் போது அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கவும் கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.