ஆர்.கே. நகரில் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அதிரடி மாற்றம்.... பிரவீன் நாயர் நியமனம்
ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமி மாற்றப்பட்டு பிரவீன் நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமியை மாற்றக்கோரி தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஸ் லக்கானியிடம் திமுக தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் வேலுச்சாமி மாற்றப்பட்டு பிரவீன் நாயர் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக, திமுக உட்பட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அங்கு தேர்தல் பிரசாரம் விறுவிறுவிப்படைந்துள்ளது.
இந்நிலையில் திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும், எம்பியுமான ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
ஆர்.கே நகர் சட்டசபைத் தொகுதியில் கடந்த முறை வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த புகார் காரணமாகவும், சமூகவிரோத சக்திகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாலும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
எனவே, ஆர்.கே நகர் தொகுதிக்கு மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் கண்காணிப்பை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும்.
அத்தொகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய ரிசர்வ் படை போலீஸ் எண்ணிக்கை போதுமான அளவு இல்லை. எனவே அங்குள்ள ஒவ்வொரு தெருக்களிலும் குறைந்தபட்சம் இரண்டு மத்திய ரிசர்வ் படை போலீஸார் நிறுத்தப்படவேண்டும்.
அதுபோலவே ஒவ்வொரு தெருவிலும் கண்காணப்பு கேமரா பொருத்த வேண்டும். இதில் பதிவாகும் வீடியோ காட்சிகளை எங்கள் கட்சி பிரதிநிதிகள் பார்வையிடவும் அனுமதி வழங்க வேண்டும்.
ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமியை மாற்றிவிட்டு வேறொரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலராக பிரவீன் நாயர் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் அதிகாரியை மாற்றும் விசயத்தில் திமுக சொல்லியடித்துள்ளது.