ஆர்.கே நகர் பணப் பட்டுவாடா.. தேர்தல் அதிகாரிகள் அவசர ஆலோசனை.. ரத்தா அல்லது வேறு ஏதேனுமா?
ஆர்.கே நகரில் அதிகரித்து வரும் பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
Recommended Video
சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா குற்றச்சாட்டு அதிகரித்து வருவதால், தேர்தல் அதிகாரிகள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் தேர்தல் நடக்குமா என்கிற கேள்வி எழுந்து உள்ளது.
ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
தேர்தல் ஆணையத்தின் பலத்த கண்காணிப்பையும் மீறி, தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இதுவரை பல இடங்களில் பணப்பட்டுவாடா நடந்து உள்ளதாகவும் இதற்கு போலீஸாரும் உடந்தையாக இருந்துள்ளதாக, தி.மு.க சார்பில் தேர்தல் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க மற்றும் டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. நேற்று பணப்பட்டுவாடா புகார் அளிப்பதற்காக கட்சிக்காரர்கள், பொதுமக்கள் என கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் பலரும் குவிந்ததால், அங்கு அதிக எண்ணிகையில் புகார் பதிவாகி உள்ளது.
இந்நிலையில், ஆர்.கே நகருக்கு சிறப்பு தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ள பத்ரா, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியோடு தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் மற்ற தேர்தல் அதிகாரிகள், பார்வையாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்ததாக கூறி ரத்து செய்யப்பட்டது. இதனால், தற்போது பணப்பட்டுவாடா புகார் குறித்து தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதால் தேர்தல் ரத்தாகுமோ என்கிற கேள்வி எழுந்துள்ளது.