குமரியில் கடும் கடல் சீற்றம்: ஊருக்குள் நீர் புகுந்தது- வீட்டை விட்டு வெளியேறிய மீனவர்கள்
குமரி: கன்னியாகுமரி கடற்கரைப் பகுதிகளில் மீண்டும் கடும் கடல் சீற்றம் ஏற்பட்டு வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் பலர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரை தென் மேற்கு பருவக்காற்றின் தாக்கத்தால் மழையுடன் கூடிய கடல் சீற்றம் ஏற்படுவது வழக்கம். இந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவில் இல்லை. இருப்பினும் கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் மிகவும் அதிக அளவில் உள்ளதாக மீனவர்கள் தரப்பில் கூறப்படுகின்றது.
இதனால் மாவட்டத்தில் கொல்லங்கோடு, வள்ளவிளை, ராமன்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக சாலைகள் உட்பட கடற்கரையை ஒட்டிய வீடுகள் கடும் சேதமடைந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் கடற்கரை பகுதிகளில் கடும் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் தேங்காப்பட்டணம் கடற்கரையில் உள்ள கிராமங்களான அரையன் தோப்பு, முள்ளூர்துறை போன்ற பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டன. குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டது. மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. இதனால் பல கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன.
ராமன்துறை பகுதிகளில் கடலரிப்பு தடுப்பு சுவரையும் தாண்டி கடல் அலை மிக வேகமாக அடித்ததால் ஊருக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் பல குடும்பங்கள் வீடுகளை காலி செய்து உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர்.
ராமன்துறை மற்றும் முள்ளூர்துறை பகுதிகளில் தூண்டில் வளைவு உடனடியாக அமைக்காவிட்டால் 2 கிராமங்களும் அழிந்து விடும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்களும், மீனவர்களும் அச்சம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications