திமுகவின் கே.சி. பழனிச்சாமியின் ரூ2 கோடி உட்பட மொத்தம் ரூ95 கோடி பறிமுதல்: ராஜேஷ் லக்கானி
சென்னை: தமிழகத்தில் இதுவரை கணக்கில் வராத ரூ95 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் கேசி பழனிச்சாமியின் வீட்டில் இருந்து மட்டும் ரூ2 கோடி பறிமுதல் செய்ததாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகளுடன் இணைந்து பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்கள் என பலரும் பதுக்கி வைத்திருந்த பணம், பொருட்கள் ஆகியவற்றை வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்து பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதேபோல் அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளரான கே.சி. பழனிச்சாமி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பொருட்களை பெருமளவு பதுக்கி வைத்துள்ளதாக தேர்தல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் பழனிச்சாமியின் வீடு, லாட்ஜ் மற்றும் உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தி ரூ50 லட்சம் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் உள்ள பழனிச்சாமி மகன் சிவராமன் வீட்டில் இருந்தும் கணக்கில் வராத ரூ1.50 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த சில ஆண்டுகளாக சிவராமன் ரூ10 கோடி வரை வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆற்று மணல் கொள்ளை மூலம் பல்லாயிரம் கோடி சம்பாதித்தவர் கே.சி. பழனிச்சாமி. ஒவ்வொரு தேர்தலிலும் மணலில் இருந்து கிடைத்த பணத்தை 'வெள்ளமாய்' தொகுதியில் ஓடவிட்டு ஜெயித்து வருபவர் கே.சி. பழனிச்சாமி.
இம்முறையும் அதே பாணியில் களம் இறங்கிய பழனிச்சாமிக்கு கடிவாளம் போடும் வகையில் தேர்தல் ஆணையம் கிடுக்குப்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, கேசி பழனிச்சாமியின் வீட்டில் நடைபெற்ற சோதனைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. அவரது வீட்டில் இருந்து மட்டும் ரூ2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கணக்கில் வராத ரூ95 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.