ரூ.1 கோடி வைர நெக்லஸ், ஜிமிக்கி, தங்க நகைகள் அபேஸ்.. அப்போலோ மருத்துவமனை டாக்டர் வீட்டில் துணிகரம்
அப்போலோ மருத்துவமனை டாக்டர் வீட்டில் ரூ.1 கோடி நகைகள் கொள்ளை போயுள்ளது.
Recommended Video
சென்னை: அப்போலோ மருத்துவமனையின் டாக்டர் வீட்டில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளை போயிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் கவுசிக். முடக்குவாத சிகிச்சை நிபுணரான இவர், தனியாக கிளினிக் நடத்தி வருவதுடன், அப்போலோ மருத்துவமனையிலும் பகுதி நேர மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை டாக்டர் கவுசிக், பணத் தேவைக்காக பீரோவை திறந்துள்ளார். அப்போது, அங்கு வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை இல்லாததை கண்டு திடுக்கிட்டார். மேலும் வைரம், தங்கத்தினாலான நகைகளும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவில் உள்ள மற்ற பொருட்களில் எவ்வித மாற்றமும் இல்லாததாலும், வழக்கமாக வைக்கப்பட்ட இடத்திலேயே பீரோ சாவி இருந்ததாலும் டாக்டருக்கு குழப்பமும் அதிகரித்தது.
மேலும் கொள்ளை போயுள்ளவை அனைத்தும் 1 கோடி ரூபாய் மதிப்புடைய தங்க, வைரத்தினாலான நெக்லஸ், செயின், ஜிமிக்கி, வளையல் என்பதால், உடனடியாக இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார், உடனடியாக விசாரணையை துவக்கியுள்ளனர். முதல்கட்டமாக வீட்டில் பணிபுரியும் பணியாளர்கள், கார் டிரைவர், என 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் வீட்டின் முன்இருந்த சிசிடிவி காமராவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அணைத்து வைக்கப்பட்டுள்ளதால், வீட்டிற்குள் யார் வந்து போனார்கள் என்பதை கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். எனினும் கொள்ளையர்களை விரைவில் தனிப்படை அமைத்து பிடிப்போம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.