சட்டவிரோதமாக கட்டப்பட்டதா கூவத்தூர் கோல்டன்பே ரிசார்ட்? ஆர்டிஐ தகவலால் பரபரப்பு
சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த கூவத்தூர் கோல்டன்பே ரிசார்ட் சட்டவிரோதமாக கட்டபட்டது என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அதிமுக பொதுச் செயலாளரான சசிகலா தமிழக முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதற்காக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் சசிகலா அளித்திருந்தார். ஆனால் உடனடியாக அவரை ஆட்சியமைக்க பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து தாம் பதவியேற்பதற்கு முன்னர் ஓபிஎஸ் தரப்பினராலோ அல்லது எதிர்க்கட்சியினராலோ தம் வசம் உள்ள எம்எல்ஏ-க்கள் விலை போகலாம் என்ற அச்சத்தின் பேரில் 120-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்களை காஞ்சிபுரத்தில் உள்ள கூவத்தூரில் உள்ள ரிசார்டில் தங்க வைக்க சசிகலா ஏற்பாடு செய்திருந்தார்.
இதனால் சில நாள்கள் சசிகலாவும் அந்த ரிசார்டில் தங்கியிருந்தார். தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் தம்மை பதவியேற்க அழைப்பார் என்ற நம்பிக்கையில் இருந்த சசிகலாவுக்கு பேரிடியாக அமைந்தது சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு. பின்னர் சசிகலா சிறை சென்றார். சசிகலா சிறை சென்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் வரை 122 எம்எல்ஏ-க்களும் 10 நாள்களாக அந்த ரிசார்டிலேயே தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
மொத்தம் 56 அறைகளில் எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அறை கட்டணம், சேவைக் கட்டணம் ஆகியவை சேர்த்து ரூ. 70 லட்சம் ஆனது. ஆனால் ரூ.20 லட்சம் மட்டும் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே பராமரிப்பு பணிக்காக கோல்டன் பே ரிசார்ட் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கூவத்தூர் விடுதி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. சென்னை ராயபுரம் மீனவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு பதிலளித்த நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications