அதிமுகவில் சேர்ந்த ஒரே மாதத்தில் லக்.. ராஜ்யசபா எம்.பியாகும் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்து 30 நாட்கள்தான் கடந்த நிலையில், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனுக்கு அதிருஷ்டம் அடித்துள்ளது. அதிமுக சார்பில் ராஜ்யசபா வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் தமாகா இணைந்தது. இந்த முடிவை எதிர்த்து அக்கட்சியின் துணைத் தலைவராக இருந்த பீட்டர் அல்போன்ஸ், பொதுச் செயலாளராக இருந்த விஸ்வநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள், தமாகாவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தனர்.
இதைத் தொடர்ந்து தமாகாவின் மூத்த தலைவர் எஸ் ஆர் பாலசுப்பிரமணியனும் கூட்டணி நிலைப்பாட்டுக்கு அதிருப்தி தெரிவித்தார். ஆனால், தாய் கட்சியான காங்கிரசில் இணையவில்லை.

ஒரே மாதம்
முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இந்த இணைப்பு படலம் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், மே 25ம் தேதியான இன்று, பாலசுப்பிரமணியன் அதிமுக சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

யோகம்
அதிமுகவுக்கு போதிய எம்எல்ஏக்கள் பலம் இருப்பதால், பாலசுப்பிரமணியன் ராஜ்யசபா உறுப்பினராவது உறுதியாகிவிட்டது. அதிமுகவில் பல சீனியர்கள் பதவிக்காக காத்திருக்கும் நிலையிலும் பாலசுப்பிரமணியனுக்கு ராஜ்யசபா உறுப்பினராகும் யோகம் கூடி வந்துள்ளது.

எதிர்க்கட்சி தலைவர்
எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் நீண்ட நெடிய அரசியல் அனுபவம் கொண்டவர். சிறந்த நாடாளுமன்றவாதி. தமிழக சட்டசபையில் 2001-06க்கு இடைப்பட்ட ஜெயலலிதா அரசின்போது, எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன். அப்போது முதல்வருக்கு எதிராக சிறந்த எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டார் என்ற பாராட்டுக்குறியவர்.

மத்திய அமைச்சர்
அதற்கு முன்பு, தேவகவுடா அமைச்சரவையில் பெர்சனல் துறை இணை அமைச்சராக பதவி வகித்தார். உள்துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்த அனுபவம் கொண்டவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்.

என்ன காரணம்
டெல்லியில் அதிமுகவின் காய் நகர்த்தல்களுக்கு எஸ்.ஆர்.பி உதவிகரமாக இருப்பார் என்பது அதிமுக தலைமையின் திட்டமாக இருப்பதாகவும், எனவேதான் அவருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி தரப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications