ஓ இதுதான் தீவிர தேடுதல் வேட்டையோ?.. போலீஸ் பாதுகாப்புடன் சென்னையில் சுற்றும் எஸ்.வி.சேகர்!
போலீஸ் தேடி வரும் எஸ்.வி.சேகர், போலீஸ் பாதுகாப்புடன் சென்னை முழுக்க வலம் வருவது அம்பலமாகி உள்ளது.
Recommended Video
சென்னை: போலீஸ் தேடி வரும் எஸ்.வி.சேகர், போலீஸ் பாதுகாப்புடன் சென்னை முழுக்க வலம் வருவது அம்பலமாகி உள்ளது. அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர்களை மிகவும் இழிவுபடுத்தி ஒரு பதிவை பேஸ்புக்கில் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்.
இது பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின் அந்த பதிவை நீக்கிவிட்டார். இப்பதிவு தொடர்பாக சென்னை போலீசாரும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
ஜாமீன்
ஆனால் போலீஸ் அவரை கைது செய்யாமல் அவர் ஜாமீனுக்கு விண்ணப்பிக்கும் வரை காத்து இருந்தது.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத் தாக்கல் செய்தார்.இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கவில்லை.
கைது கிடையாது
இந்த நிலையில் அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீன் கேட்டார். ஆனால் உச்ச நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அத்துடன் அவரை கைது செய்யலாம் என்றும் கூறியது. ஆனால் தமிழக போலீஸ் இன்னும் அவரை கைது செய்யாமல் இருந்து வருகிறது.
புகைப்படம்
இந்த நிலையில் ஏற்கனவே எஸ்.வி. சேகர் பலமுறை போலீசுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. சில பாஜக கட்சி நிகழ்வுகளிலும் அவர் கலந்து கொண்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. தற்போது அவர் போலீஸ் பாதுகாப்புடன்தான் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
போலீஸ் பாதுகாப்பு
அதன்படி நேற்று எஸ்.வி. சேகர் போலீஸ் பாதுகாப்புடன் சென்னையில் வலம் வந்துள்ளார். முக்கியமாக போலீஸ் பாதுகாப்புடன் தாம்பரம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் சாப்பிட்டுள்ளார். அதன்பின் போலீசுடன் அவரது சொந்த வாகனத்தில் சென்றுள்ளார். போலீஸ் அவருக்கு கார் கதவை திறந்துவிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.