சட்டசபை தேர்தல்: ஜன. 15-க்குள் வேட்பாளர் பட்டியல்; திமுக சதியால் அன்புமணிக்கு எதிராக சகாயம்- ராமதாஸ்
கன்னியாகுமரி: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஜனவரி 15-க்குள் வெளியிடுவோம் என்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை அன்புமணி ராமதாஸுக்கு போட்டியாக களமிறக்க தி.மு.க.தான் சதி செய்வதாகவும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட பா.ம.க. பொதுக் குழுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ்,
சட்டசபை தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் பொங்கல் பண்டிகைக்குள் வெளியிடப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:
பா.ம.க .முதல்வர் வேட்பாளர் அன்புமணியின் வளர்ச்சி பிடிக்காமல் சிலர் சகாயம் ஐ.ஏ.எஸ்-முதல் வேட்பாளராக வரவேண்டும் என சொல்கிறார்கள். அன்புமணியின் வளர்ச்சியை பிடிக்காத திமுகவினர்தான் இதன் பின்னணியில் உள்ளனர்.
சகாயம் கிரானைட் ஊழல் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டவர். அவர் தனது அறிக்கையை தற்போதுதான் தாக்கல் செய்துள்ளார். அவரால் எப்படி ஊழலை ஒழிக்க முடியும்?
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் சகாயத்தால் எப்படி ஒரு கட்சியை இப்போது தொடங்கி மக்களை சந்திக்க முடியும்? எனக்கு தெரிந்தவரை சகாயத்திற்கு தற்போது தீவிர அரசியலில் ஈடுபட விருப்பம் இல்லை.
அவர் குடிமைப்பணியில் தொடரவே விரும்புகிறார். ஆனால் சிலர் வேண்டுமென்றே விஷமனத்தனமான பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications