கிரானைட் கொள்ளை: சகாயத்தின் கள ஆய்வில் சிக்கிய ரகசிய டைரி?
மதுரை: கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திடம் பி.ஆர்.பி. கிரானைட்ஸ் நிறுவனத்திற்கு எதிரான ஆதாரங்கள் அடங்கிய ரகசிய டைரி சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள கிரானைட் முறைகேடுகள் குறித்து 3-ஆம் கட்ட விசாரணையை ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தொடங்கியுள்ளார். பொதுப்பணித்துறை, கனிமவளத் துறை அதிகாரிகளிடம் அவர் நேற்று மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன.
மதுரை மாவட்ட கனிம வள உதவி இயக்குநர் ஆறுமுக நயினார், மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமாரி ஆகியோருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து, நேற்று சகாயம் விசாரித்தார். அப்போது கிரானைட் முறைகேடு தொடர்பான பல கோப்புகளை சகாயத்திடம் ஆறுமுக நயினார் அளித்தார்.மேலும் சில அதிகாரிகளிடம் அவர் விசாரணை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த 2001ம் ஆண்டு அரசு சார்பாக 365 காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட 27 ஏக்கர் நிலத்தை, கிரானைட் குவாரி உரிமையாளர்கள் அபகரித்ததாகவும், இந்த நிலத்தை மீட்டு தருமாறு நேற்றும் காவலர்கள் மனு அளித்தனர்.
கிரானைட் முறைகேடு தொடர்பாக இதுவரை நடைபெற்ற விசாரணையில் 315 பேர் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன. மூன்றாவது கட்ட விசாரணை வரும் 30ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
குவாரிகளில் ஆய்வு
கடந்த முறை நடைபெற்ற இரண்டாவது கட்ட ஆய்வின் போது கிரானைட் குவாரிகளில் கள ஆய்வு மேற்கொண்ட சகாயம், இன்றும் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
அதன்படி கீழவளவு, பஞ்சபாண்டவர் மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் கிரானைட் கற்கள் வெட்டி வைக்கப்பட்ட பகுதிகளில் இன்று சகாயம் குழு ஆய்வு நடத்துகிறது.
சமணர் படுகை
கடந்த முறை திருவாதவூர் ஓவா மலையில் உள்ள சமணர் படுகைமலையில் தன்னுடைய முதல் கள ஆய்வை மேற்கொண்டார் சகாயம். தொல்லியல் துறைக்குச் சொந்தமான, பழந்தமிழர்கள் புழங்கிய பிராமி எழுத்துகளைப் பாதுகாத்த அந்த இடம் கபளீகரம் செய்யப்பட்டதை கண்டு பிடித்தார் சகாயம். திருவாதவூரில் 1,500 ஏக்கர் மதிப்புள்ள அரசுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
தப்பிய தாசில்தார்
கடந்த முறை கள ஆய்வின் போது மேலூர் பகுதி தாசில்தார் மணிமாறன் தனக்குக் கால் சுளுக்கு என்று சகாயத்துடன் வர மறுத்துவிட்டார். வருவாய் ஆய்வாளர் பூமாயியும், வி.ஏ.ஓவும் சகாயம் கேட்கும் கேள்விகளுக்கு தட்டு தடுமாறி பதில் சொன்னார்களாம்.
நடுக்காட்டில் பங்களா
நடுக்காட்டுக்குள் சிதைக்கப்பட்ட நிலையில் இருந்த மர்ம பங்களாவை திறக்கச் சொல்லி ஆய்வு செய்த சகாயம் அங்கிருந்த ஆவணங்களை அள்ளி வந்தாராம் அதில் முக்கியமான டைரி ஒன்று சிக்கியுள்ளது. அந்த அலுவலகம் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமானதாம்.
ரகசிய டைரி
சகாயத்தின் கையில் சிக்கிய டைரியில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு கொடுக்கப்பட்டது என்ற விவரங்கள், பிரான்ஸ், இத்தாலி உட்பட வெளிநாட்டில் இயங்கும் பல்வேறு பாலீஸ் தொழிற்சாலைகளின் தொடர்புகள், பினாமி குவாரிகளின் பட்டியல் என அந்த டைரி முழுவதும் பி.ஆர்.பிக்கு எதிரான பல்வேறு ஆதாரங்கள் சிக்கியுள்ளதாம்.
இனி என்ன சிக்குமோ
சகாயத்தின் விசாரணையைக் கண்டு கிரானைட் குவாரி முதலைகள் கண் கொத்தி பாம்பாக கவனித்து வருகின்றன. அரசியல் புள்ளிகளும் ஆர்வத்தோடு கவனித்து வருகின்றனர். இன்றைக்கும் கள ஆய்வு செய்யும் சகாயத்திடம் என்னென்ன புதையல்கள் சிக்கப் போகிறதோ?