புழு நிறைஞ்ச தண்ணியக் குடி- தூத்துக்குடி படுகொலையை கண்டித்து போராட்டம் நடத்தியவர்களுக்கு நேர்ந்த கதி
சேலத்தில் போராட்டம் நடத்தியவர்களை சித்ரவதை செய்திருக்கிறது போலீஸ்.
Recommended Video

சேலம்: ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இன்று சேலத்தில் மறியல் போராட்டத்தில் நடத்தியது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். ' எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை இழுத்துச் சென்றதால், போலீஸார் எங்களைப் பழிவாங்குகின்றனர்' எனக் குமுறுகின்றனர் டைஃபி தோழர்கள்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த பேராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூரத்தைக் கண்டித்து இன்று சேலம் ஆட்சியர் அலுவலக மறியல் போராட்டத்தை அறிவித்தது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்.

இன்று காலை 10 மணியளவில் சேலம் அண்ணா பூங்காவில் இருந்து ஊர்வலமாகச் செல்லவும் திட்டமிட்டிருந்தனர். ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போகும் தகவல் அறிந்து, பெரும் எண்ணிக்கையிலான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையைத் தயார் செய்து கொண்டு வந்திருந்தனர் டைபி அமைப்பினர். ஒரு பொம்மையைப் போலீஸார் கைப்பற்றிவிட்டால், அடுத்தடுத்து உருவ பொம்மையை எரிக்கும் வகையில் ஐந்துக்கும் மேற்பட்ட வைக்கோல் பொம்மைகளைக் கொண்டு வந்திருந்தனர்.

மறியல் போராட்டம் தொடங்கியதும், இரண்டு பேர் சேர்ந்து கொண்டு முதல்வரின் உருவ பொம்மையை இழுத்து வருவது போலவும், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் போலீஸார் நடந்து கொண்ட விதம் குறித்தும் ஆவேசக் கோஷம் எழுப்பினர். அவர்களிடம் இருந்து பொம்மைகளைப் பறித்த போலீஸார், அருகே இருந்த தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
அங்கிருந்த நம்மிடம் பேசிய டைஃபி தோழர்கள், மக்களுக்கான போராட்டத்தில்தான் நாங்கள் பங்கெடுத்திருக்கிறோம். எங்களை அராஜகமான முறையில் போலீஸார் கைது செய்தனர். குடிப்பதற்குத் தண்ணீர் வேண்டும் என நீண்டநேரமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களை ஒரு பொருட்டாகவே போலீஸார் மதிக்கவில்லை. இருப்பினும், தொடர்ந்து கோஷம் எழுப்பியதால், 'மண்டபத்தில் இருக்கும் தொட்டியில் தண்ணீர் இருக்கிறது. அதை எடுத்துக் குடியுங்கள்' எனக் கூறிவிட்டனர்.

அந்தத் தொட்டியில் உள்ள தண்ணீரில் புழுக்களும் பூச்சிகளும் மிதக்கின்றன. முதலமைச்சரின் சொந்தத் தொகுதியில் ஆர்ப்பாட்டம் செய்ததால், எங்களை வதைக்கும் வேலையில் காவல்துறை ஈடுபட்டுள்ளது" என்றவர், பூச்சிகள் நிறைந்த அந்தத் தண்ணீரையும் நமக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியிருந்தார்.












Click it and Unblock the Notifications