போனில் ஆபாச பேச்சு: சேலம் லோக்கல் டிவி தொகுப்பாளர்கள் போலீஸ் புகார்!
சேலம்: சேலத்தில் லோக்கல் டிவி நேரலை நிகழ்ச்சியின் போது போனில் தொடர்பு கொள்பவர்கள் ஆபாசமாக பேசுவதாக புகார் எழுந்துள்ளது. மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
சேலத்தில் வின்ஸ்டார் சிட்டி டெவலப்பர்ஸ் என்கிற தனியார் மனை விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மனைகள் விற்பனையை மேம்படுத்த, சேலத்தில் உள்ள லோக்கல் டி.வி சேனல்களில் நேரலை மூலம் விளம்பரம் செய்வதற்காக, அந்த நிறுவனத்தில் சில பெண்கள் பணிபுரிகிறார்கள்.
அப்படி நேரலை வழியாக விளம்பரம் செய்யும் போது வாடிக்கையாளர்கள் போன் செய்து மனை புக் செய்து கொள்ளும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்திருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டிவி நேரலை நிகழ்ச்சியின் போது போன் செய்து அந்த பெண்களிடம் ஆபாசமாக சிலர் பேசியுள்ளனர். அதுமட்டுமல்லாது நிகழ்ச்சியில் பங்கேற்ற குறிப்பிட்ட இரு பெண்களையும் தனியே தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியுள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்நிறுவன பெண்கள், சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
புகார் கொடுக்க வந்த பெண்களிடம் பேசியபோது, "நாங்கள் எல்லாம் ஏழ்மையான குடும்பத்து பெண்கள். வேலைக்கு வந்தே ஆக வேண்டிய சூழலில் இருப்பவர்கள். நாங்கள் நிகழ்ச்சி நடத்துவது எங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை. அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.
மனை வாங்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம். விருப்பமில்லையெனில் விட்டுவிடலாம். அதைவிட்டுவிட்டு போன் செய்து அசிங்க அசிங்கமாக பேசுகிறார்கள். இதனால் எங்கள் வீட்டருகில் உள்ளவர்கள் எல்லாம் எங்களை கேவலமாக பார்க்கிறார்கள். எங்களது வீட்டிலும் இதனால் பிரச்னை உருவாகிறது. எங்களாலும் நிம்மதியாக பணி செய்ய முடியவில்லை. எங்களுக்கு இதை விட்டால் வேறு வழியும் இல்லை" என்றனர் கலங்கியபடி.
அந்த பெண்களுக்கு ஆபாச அழைப்புகள் வரும் தொடர்பு எண்கள் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதை வைத்து குற்றவாளியை பிடிக்க சேலம் பள்ளப்பட்டி காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.