சங்கரன்கோவிலில் இந்து முன்னணி நகர செயலாளர் வெட்டிக்கொலை- 3 பேர் கும்பல் நள்ளிரவில் வெறிச்செயல்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் இந்து முன்னணி நகரச் செயலாளர் நள்ளிரவில் தனது வீட்டின் வெளியே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பாட்டத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜீவராஜ் (36). இவர் இந்து முன்னணியின் நகர செயலாளராக இருந்தார்.
ஜீவராஜ் அப்பகுதியில் முனீஸ்வரன் ஆலயத்தின் தர்மகர்த்தாவாகவும் செயல்பட்டு வந்தார். இந் நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஜீவராஜ் தனது விட்டு வாசல் முன்பு உறவினர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் திடீரெ ஜீவராஜ் முகத்தில் மிளகாய் பொடியை தூவியது. தொடர்ந்து கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் அரிவாள்களால் ஜீவராஜை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிவிட்டனர்.
தலை, கை, கால்களில் பலத்த வெட்டுக் காயமடைந்த ஜீவராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்து முன்னணி நகர செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுத்தீயாக பரவியது. இதையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க சங்கரன்கோவில் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜீவராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட ஜீவராஜ் நில புரோக்கராகவும் இருந்து வந்துள்ளார்.
நிலத்தகராறு காரணமாக முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையான ஜீவராஜுக்கு சர்மிளா, அய்யம்மாள் என 2 மனைவிகளும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.