மெட்ரோ சவாரிக்கு மத்தியில்.. குற்றாலத்தில் படகு சவாரி போன சரத்குமார்!
குற்றாலம்: சென்னையில் அரசியல் தலைவர்கள் மெட்ரோ ரயிலில் சவாரி செய்து கலகலப்பாக்கி வந்த நிலையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏவுமம், நடிகருமான சரத்குமார் குற்றாலத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்தார்.
அருவிகளின் நகரமாக விளங்கும் குற்றாலத்தில் கடந்த சிலதினங்களாக தென்மேற்கு பருவமழையின் காரணமாக சீசன் களைக்கட்டியது. அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து இருந்த நிலையில் கடந்த 4தினங்களாக மலைப் பகுதியில் சாரல் இல்லை என்றாலும் அருவிகளுக்கு வரும் தண்ணீர் அளவு குறையவில்லை.
மேலும் குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகள் பொழுது போக்கும் வண்ணம் இங்கு ஐந்தருவி, சுற்றுசூழல் பூங்காவைத் தவிர வேறெந்த வசதிகளும் இல்லாததால் கடந்த சில நாட்களாக தங்களது சுற்றுலாவை அருவிகளிலேயே பயணிகள் கழித்து வந்தனர்.
இந்நிலையில் ஐந்தருவி செல்லும் வழியில் உள்ள வெண்ணமடை குளத்தில் படகு சவாரியை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் முருகையாப் பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் பி.ஜி.ராஜேந்திரன், நகரமன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடக்க விழாவில் தென்காசி சட்டமன்ற உறுப்பினரான சரத்குமார் மட்டும் மிஸ்ஸிங் ஆனார். இந்நிலையில் நேற்று அவர் வருகை தந்தார். ஐந்தருவி படகு குழாமில் ஆய்வு மேற்கொண்டு படகு பயணம் மேற்கொண்டார்.
சுற்றுலாப் பயணிகளோடு கலந்துரையாடி அவர்களது ஆலோசனைகளை கேட்டார் .சரத்குமாரோடு எராளமான சுற்றுலாப் பயணிகள் நின்று புகைப்படம் எடுத்துகொன்டனர்.