ஜல்… ஜல்… மாட்டுவண்டி பயணம்: சரத்குமார், ராதிகா உற்சாக பொங்கல்
காரைக்குடி: போக்குவரத்து சாதனங்களின் வளர்ச்சியால் மோட்டார் சைக்கிள், கார், எத்தனையோ சாதனங்கள் வந்துவிட்டன. ஆனாலும் பண்டைய கால போக்குவரத்து சாதனமான மாட்டுவண்டியில் பயணித்த காலத்தை மறக்கமுடியாது.
ஊரில் திருவிழா என்றால் வண்டிமாடு கட்டி பயணப்படுவது தனி சுகம்தான். இதனை உற்சாகத்தோடு பொங்கல் பண்டிகை நாளில் அனுபவித்துள்ளார் சமத்துவமக்கள் கட்சித்தலைவர் சரத்குமார்.
தனது மனைவி ராதிகா, மகன் ராகுலுடன் இணைந்து காரைக்குடி அருகே சமத்துவ பொங்கல் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் சரத்குமார்.

குல தெய்வ கோவில்
காரைக்குடி அருகே உள்ள சிறாவயல் கிராமத்தில் அமைந்துள்ள காமாட்சிஅம்மன் கோயில்தான் அகில சமத்துவமக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமாரின் குலதெய்வ கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் வைத்து சாமி கும்பிடுவார் சரத்குமார்.
மக்களுடன் பொங்கல்
இந்த ஆண்டும் தனது கோயிலில் பொங்கல் வைக்க வந்த சரத்குமார், காலையில் மக்களோடு சேர்ந்து பொங்கல் வைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று தனது கட்சியினரிடம் கூறிவிட்டார்.
சமத்துவ பொங்கல்
இதற்காகத்தான் காத்திருந்தது போல காரைக்குடியில் தங்களது கட்சியின் பெயரில் சமத்துவ பொங்கல் விழாவிற்கு ஏற்பாடு செய்து விட்டனர் சமகவினர்.

300 பெண்கள் புடைசூழ
காரைக்குடி மகர்நோன்பு பொட்டலில் சுமார் முன்னூறு பெண்கள் பொங்கல் வைக்க ஏற்பாடு செய்து அதோடு ராதிகாவையும் அங்கு பொங்கல் வைக்க ஏற்பாடு செய்துவிட்டனர்.
கூடிய மக்கள்
தமிழர்களின் பாரம்பரிய வாகனமான மாட்டு வண்டியில் பயணம் செய்வார் . ராதிகா அடுப்பு எரித்து பொங்கல் வைப்பார் தலைவர் சரத்குமார் என்று அறிவித்தனர் அவரது கட்சியினர் இவற்றைக் காண பெருங்கூட்டம் கூடியது.
காரில் வந்து மாட்டுவண்டிக்கு மாற்றம்
பொங்கல் அன்று காலை காரில் சென்னையில் இருந்து வருகை தந்த சரத்குமார், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சிறிது தூரத்திற்கு முன்பு காரில் இருந்து இறங்கி தனக்காக அலங்காரம் செய்யப்பட்ட மாட்டு வண்டிக்கு மாறினார் சரத்குமார்.
மாட்டுவண்டியின் கயிறுகளை அசால்டாக பிடித்தவர், விருட்டென ஓட்ட துவங்கினார்.

காரில் ராதிகா
எந்தவித பதட்டமும் இல்லாமல் இவர் மாட்டு வண்டியை ஓட்டியதை பார்த்த அனைவருமே ஆச்சயப்பட்டு போனார்கள். மாட்டு வண்டிக்கு பின்னால் காரில் ராதிகாவும், அவருடைய மகன் ராகுல் சரணும் வந்தனர்.
குத்துவிளக்கு ஏற்றிய ராதிகா
ராதிகா, சரத்குமாரை பார்த்த மகிழ்ச்சியில் பெண்கள் உற்சாகமாக கைஅசைக்க, பதிலுக்கு கையசைத்து விட்டு குத்து விளக்கை ஏற்றினர் ராதிகா மற்றும் சரத்குமார்.
விறகு அடுப்பில் பொங்கல்
அதன்பின் அனைவரும் அடுப்பை பற்ற வையுங்கள் என்று அறிவிப்பு செய்ய, தனக்கு ஒதுக்கப்பட்ட அடுப்பில் விறகு அடுக்கி பற்ற வைத்தார் ராதிகா. அடுப்பு எரிய கொஞ்சம் கஷ்டப்பட கண்ணீர் கசிய அருகில் நின்ற சரத்குமார், அவருக்கு உதவி செய்தார்.
குலவையிட்ட பெண்கள்
பாத்திரத்தில் பொங்கல் அரிசியை போட்டதும் சிறிது நேரத்தில் பொங்க பானையில் பொங்கல் பொங்கியதும் பெண்கள் குலவை சத்தம் போட அந்த இடமே கலகலப்பாக காட்சி தந்தது. சரத்குமார், ராதிகா இருவருமே பொங்கல் வைத்து கொண்டிருந்த அனைவரையும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
கரகாட்டம் கலகலப்பு
சரத்குமார் மேடையில் நின்று கரகாட்ட கலைஞர்களை ஆட சொல்ல வேடிக்கை பார்க்க மொத்த கூட்டமும் விசில் அடித்து உற்சாகம் செய்தது.
தமிழர்களுக்கு வளம்
அதன்பின் மேடையில் பேசிய சரத்குமார், "இந்த பொங்கல் விழா தமிழர்களுக்கு வளத்தை தரும் விழாவாக இருக்கும். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அங்குள்ள தமிழர்களுக்கும் இந்த தை திருநாள் மகிழ்ச்சியை தந்துள்ளது.
பொங்கல் வாழ்த்து
தமிழகத்தில் நடக்கும் சிறப்பான ஆட்சி இந்த ஆண்டு மேலும் பல சாதனைகள் படைக்கும்" என்று பொங்கல் திருநாள் வாழ்த்து செய்தியை தெரிவிக்க, ராதிகாவும் மைக்கை பிடித்து பொங்கல் திருநாள் வாழ்த்து தெரிவித்தார்.
பட்டு சேலை பரிசு
பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பெண்களில் ஐந்து பேருக்கு குலுக்கல் முறையில் சென்னையில் இருந்து வாங்கி வந்த பட்டு சேலையை பரிசாக வழங்கினார்.
குல தெய்வகோவிலில் பொங்கல்
இந்த கொண்டாட்டம் முடிந்த உடன் மாலையில் தனது சொந்த குலதெய்வ கோயிலில் தனது கிராமத்து மக்களோடு பொங்கல் வைத்து வழிபாடு செய்தார் சரத்குமார்.












Click it and Unblock the Notifications