ஆடிட்டர் வந்தவுடன் நடிகர் சங்கத்தின் கணக்குகள் ஒப்படைக்கப்படும்- சரத்குமார்
சென்னை:நடிகர் சங்க கணக்குகளை ஒப்படைக்க வேண்டும் என்ற கார்த்தியின் பேச்சுக்கு ஆடிட்டர் வந்தவுடன் கணக்குகள் ஒப்படைக்கப்படும் என்று சரத்குமார் பதிலளித்திருக்கிறார்.
தென் இந்திய நடிகர் சங்கத்தின் 3வது செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன் பின்னர் நடிகர் சங்க நிர்வாகிகள், அதன் தலைவர் நாசர் தலைமையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.
இந்த பேட்டியின் போது முன்னாள் நிர்வாகிகள் முழுமையான கணக்கு காட்டவில்லை என்றும் கணக்குகளை ஒப்படைக்கக் கோரி பலமுறை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது என்றும் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி புகார் தெரிவித்தார்.

2013-14; 2014-15 ஆம் ஆண்டு கணக்குகளை முன்னாள் தலைவர் சரத்குமார் இன்னும் ஒப்படைக்கவில்லை. சங்க கணக்குகளை ஒப்படைக்காததால் தான் பொதுக்குழுவை கூட்டுவதில் சிக்கல் நிலவி வருகிறது.
தேர்தல் முடிந்து, 15 நாட்களில் கணக்கு கொடுப்பதாக கூறியிருந்தனர். ஆனால், இன்னும் கணக்கு காட்டவில்லை. நடிகர் சங்க கணக்குகளை உடனே ஒப்படைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கார்த்தி கூறியிருந்தார்.
கார்த்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு "ஆடிட்டர் வெளியூர் சென்றிருக்கிறார்.அவர் வந்தவுடன் நடிகர் சங்கத்தின் கணக்குகள் முறையாக ஒப்படைக்கப்படும்" என்று நடிகர் சரத்குமார் பதிலளித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications