மது விலக்குக்காக உயிரிழந்த சசிபெருமாளுக்கு கள் படையல்... வழக்கு தொடரப்போவதாக மகன் முடிவு
ஈரோடு : மதுவிலக்குக்காக போராடி உயிரிழந்த சசி பெருமாள் படத்திற்கு கள் வைத்து படையிலிட்ட தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி மீது வழக்கு தொடரப்பபோவதாக சசிபெருமாள் மகன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு ஆக்ஸ்போர்டு ஹோட்டலில் சனிக்கிழமை இந்நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் மண் கலயத்தில் கள், பனம்பழம், வாழை, தேங்காய் உள்ளிட்டவை படையலாக வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களுக்கு நல்லசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது...
சங்க காலத்தில் மன்னர்கள், போரில் வீர மரணம் அடைந்தவர்கள், முதியவர்கள் உள்ளிட்டோருக்கு கள் படையல் வைக்கும் மரபு இருந்தது. அதற்கான ஆதாரம் புறநானூற்று பாடல்களில் இடம்பெற்றுள்ளன.
அதியமானும், ஔவையாரும் கள் அருந்தியதற்கான சான்றும், அதியமான் இறந்த பினனர் அவரது சமாதியில் நடுகல் நட்டி அதன் அருகே கள், மயில்தோகை உள்ளிட்டவற்றை படையலாக வைத்து வழிபட்டதற்கான சான்றும் புறனானூற்றுப் பாடல்களில் இடம்பெற்றுள்ளன.
இதை முன்னுதாரணமாக கொண்டு தமிழர் மரபுபடி, காந்தியவாதி சசிபெருமாளுக்கு கள் படையல் வழிபாடு நடத்தினோம். தொடக்கத்தில் கள்ளுக்கு எதிரான நிலைப்பாட்டை சசிபெருமாள் கொண்டிருந்தாலும், பின்னர் எங்களின் வாதத்தில் இருக்கும் உண்மையை புரிந்துகொண்டு கள், உணவின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக்கொண்டார்.
வெளிநாட்டு மதுவகைகள் மற்றும் டாஸ்மாக் மதுக்களுக்கு எதிராக மட்டும் தான் சசிபெருமாள் போராட்டம் நடத்தினார். கள்ளுக்கு அனுமதி கோரி கன்னியாகுமரி முதல் சென்னை வரை 2 ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய பேரணியிலும், 21.1.2015-ல் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த உண்ணாவிரத அறப்போராட்டத்தில் எங்களுடன் சசிபெருமாள் பங்கேற்றார். ஆகவே, கள் இயக்க போராளியாக திகழ்ந்த அவருக்கு கள் படையல் வழிபாடு நடத்தி வீரவணக்கம் செலுத்தியுள்ளோம் என்றார்.
இந்நிலையில் மது விலக்குக்கு எதிராக போராடிய தனது தந்தை சசி பெருமாளுக்கு கள் வைத்து படையிலிட்ட நல்லசாமி மீது வழக்கு தொடரப்போவதாக சசிபெருமாள் மகன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications