எல்லாமே சசி, தினகரன்தான்... ஜெயக்குமார், ஓ.பி.எஸ் எல்லாம் சும்மா.. நாஞ்சில் சம்பத்
கட்சியில் சசிகலாவும் தினகரனும் தான் அதிகாரம் படைத்தவர்கள் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
நாகர்கோவில்: அதிமுகவில் சசிகலாவும் தினகரனும் தான் அதிகாரம் படைத்தவர்கள் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். ஜெயக்குமாரோ அல்லது ஓபிஎஸோ கட்சியில் எந்த மாற்றத்தையும் செய்யமுடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிமுகவின் துணை கொள்கை பரப்பு செயலாளரான நாஞ்சில் சம்பத் சசிகலா மற்றும் டிடிவி தினகரனின் அதிதீவிர ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். இதனால் தினகரனுக்கு எதிராக செயல்படும் எடப்பாடி அணியையும் ஓபிஎஸையும் சரமாரியாக வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் விளாசி வருகிறார்.
இந்நிலையில் நாஞ்சில்சம்பத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கட்சியில் நிலவும் குழப்பங்கள் குறித்து விவரித்தார்.

அதிகாரம் படைத்தவர்கள்
அவர் பேசியதாவது, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் சசிகலா தான். அவரால் நியமிக்கப்பட்டவர் துணை பொதுச்செயலாளர் தினகரன். இவர்கள்தான் கட்சியில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரும் அதிகாரம் படைத்தவர்கள் என்றார்.

ஒன்றும் செய்ய முடியாது
இவர்களை தவிர அமைச்சர் ஜெயக்குமாரோ, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வமோ கட்சியில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட தினகரன்
கழக தொண்டர்களால் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினகரனை தினமும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து வருகிறார்கள். சட்டசபை கூட்டத்தொடர் முடியும் முன்பு அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தினகரனை சந்திப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

திவாகரனுக்கு பொறுப்பில்லை
திவாகரனுக்கு கட்சியில் எந்த பொறுப்பும் இல்லை. தினகரன், உறவினர் என்ற முறையில் அவருடன் நல்ல தொடர்பில் இருக்கிறார் என்றும் நாஞ்சில் சம்பத் கூறினார்.

தேர்தல் கமிஷனுக்குதான் தயக்கம்
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் தயங்கவில்லை என்றும் அவர் கூறினார். தேர்தல் கமிஷன் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயக்கம் காட்டுவது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஊடகங்கள்தான் மிகைப்படுத்தின
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓ. பன்னீர்செல்வத்தின் பின்னால் மக்கள் இருப்பதாக ஊடகங்கள் மிகைப்படுத்தி செய்தி வெளியிட்டனர். இப்போது ஓ. பன்னீர்செல்வம் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவருடன் பொன்னையன், பி.எச். பாண்டியன், பாண்டியராஜன், செம்மலை ஆகிய 4 பேர் மட்டுமே உள்ளனர் என்றும் நாஞ்சில் சம்பத் நக்கலடித்தார்.

கூலிக்கு ஆள் பிடித்து வருகிறார்கள்
பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கூலிக்கு ஆள் பிடித்து வருகிறார்கள். ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு பிறகு தினகரன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்கஉள்ளார். அந்த சம்பவம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக இருக்கும். அரசியல் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

எடப்பாடிக்கு அழைப்பு
இந்த கூட்டங்களில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு அனுப்புவோம். அதில் பங்கேற்பதும், புறக்கணிப்பதும் அவரது விருப்பம் என்றும் நாஞ்சில் சம்பத் கூறினார்.












Click it and Unblock the Notifications