அடடே! ஓபிஎஸ்ஸை வம்படியாக முன்னிறுத்திய தம்பிதுரை- மெரினா சுவாரசியம்!
அறிஞர் அண்ணாவின் 48வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அவரது நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: அறிஞர் அண்ணாவின் 48வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இன்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்து சேர்ந்து மலர் வளையம் வைத்தார். இதேபோல் ஒவ்வொரு இடத்திலும் பின் வரிசையில் நிற்கும் ஓபிஎஸை எம்பி தம்பிதரை வலுக்கட்டாமாக முன்னுக்கு இழுத்து நிற்க வைத்ததையும் காணமுடிந்தது.
அறிஞர் அண்ணாவின் 48வது நினைவுதினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அமைச்சர்கள் சகிதமாக சென்னை மெரினா கடற்கைரையில் உள்ள அறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை மெரினாவில் 144 தடை நடைமுறையில் உள்ள நிலையில் சசிகலா அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்களுடன் அண்ணா, ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரின் நினைவிடத்தில் இன்று தடையை மீறி அஞ்சலி செலுத்தினார்.

படு உற்சாகமாக இருந்த சசி
அண்ணாவின் நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்த வந்த அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா படு உற்சாகமாக காணப்பட்டார். அவரின் செயல்பாடு அக்கா ஜெயலலிதா மறைந்த சோகத்தில் இருந்து அவர் முற்றிலும் வெளிவந்ததைப் போன்று இருந்தது.

சசியின் திடீர் சோகம்
இருப்பினும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபோது திடீரென சோக முகத்துடன் காணப்பட்ட அவர், வழக்கம்போல் கர்சிப்பை வைத்து கண்களை துடைத்துக்கொண்டார். முன்னதாக அண்ணாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய போது கூட்டத்தோடு கூட்டமாக பின் வரிசையில் நின்றிருந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்த சசிகலா சேர்ந்து மலர் வளையம் வைக்குமாறு கூறினார்.

அதிமுகவில் என்ன நடக்கிறது?
இதேபோல் ஒவ்வோரு இடத்திலும் கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் ஓபிஎஸை அதிமுக எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை இழுத்து இழுத்து முன்வரிசையில் நிற்க வைத்ததையும் காணமுடிந்தது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விலகிச்செல்வதும் அவரை சசிகலா ஆதரவு நிர்வாகிகள் இழுத்துப் பிடிப்பதும் மக்களிடையே அதிமுகவில் என்ன நடக்கிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

முதல்வரை அவமதித்த சசி
அண்மையில் சசிகலா நடத்திய அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பத்தோடு பதினொன்றாக எம்எல்ஏக்கள் வரிசையிலேயே உட்கார வைத்திருந்தார். இது அதிமுக எம்எல்ஏக்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பாராட்டைப் பெறும் ஓபிஎஸ்
இந்நிலையில் அண்ணாவின் நினைவிடத்தில் சசிகலா, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முன்னுக்கு அழைத்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜல்லிக்கட்டு, விவசாயிகள் பிரச்சனை, கிருஷ்ணா நதிநீர் என அனைத்து பிரச்சனைகளிலும் முதல்வர் பன்னீர் செல்வத்தின் நடவடிக்கை மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

ஓபிஎஸ்க்கு முன்னுரிமை?
அதேநேரத்தில் சசிகலா முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மதிப்பதில்லை என்ற தகவலும் பரவி வருகிறது. இந்நிலையில் ஓபிஎஸ்க்கு முன்னுரிமை அளிப்பதுப்போல் சசிகலா இன்று நடந்துகொண்டது அக்கட்சி நிர்வாகிகள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications