சசிகலா புஷ்பாவின் அம்மாவும் முன்ஜாமீன் கோரி மதுரை ஹைகோர்ட் கிளையில் மனுத் தாக்கல்!
மதுரை: அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவின் தாயார் கெளரி தமக்கு முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நேற்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்ததால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் சசிகலா புஷ்பா. ஆனால் ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்ய முடியாது என பிடிவாதமாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சசிகலா புஷ்பா மற்றும் குடும்பத்தினர் மீது அவரது வீட்டில் வேலை பார்த்த 2 பெண்கள் புகார் அளித்தனர். அதில் சசிகலா புஷ்பாவின் கணவர், மகன் ஆகியோர் கொடுத்த பாலியல் தொல்லைகளுக்கு சசிகலா புஷ்பா, அவரது தயார் கெளரி ஆகியோர் உடனிருந்தனர் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குடும்பமே முன்ஜாமீன் மனு
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பா, கணவர் மற்றும் மகன் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

ஆக. 22 வரை இடைக்கால தடை
இம்மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் வரும் 22-ந் தேதி வரை சசிகலா புஷ்பாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் சசிகலா புஷ்பாவின் தாயார் கெளரி நேற்று தமக்கு முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.

தாயாரும் முன்ஜாமீன் மனு
அதில், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப்ராஜா மற்றும் என் மீது புகார் அளித்து உள்ளனர். இதன்பேரில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விரைவில் விசாரணை
அதிமுக-வின் ராஜ்யசபா உறுப்பினராக இருந்த சசிகலா புஷ்பா சமீபத்தில் கட்சி விவகாரம் காரணமாக நீக்கப்பட்டார். இந்த சூழ்நிலையில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக எங்கள் மீது இந்த புகார் அளிக்கப்பட்டு உள்ளது என கூறியிருந்தார். இந்த முன்ஜாமீன் மனு மீது விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications