சின்னம்மாவுக்கு அஞ்சலி செலுத்த போகாத 'சின்னம்மா' சசிகலா நடராஜன்!
சசிகலா நடராஜனின் சின்னம்மா குணர்பூசணி அம்மாள் மரணமடைந்தார்.
தஞ்சாவூர்: தமிழக முதல்வரின் தோழி சசிகலாவின் சின்னம்மா மறைவிற்கு அவர் அஞ்சலி செலுத்த சசிகலா செல்லவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. இவரது அப்பாவின் தம்பி வைத்திலிங்கம் சாளுவரின் மனைவியான குணர்பூசணி அம்மாள் நேற்று முன்தினம் மரணமடைந்தார். இவரது இறுதிச்சடங்கு மன்னை நகரில் நேற்று நடைபெற்றது. சசிகலா நடராஜனின் தம்பி திவாகர் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.
இந்த இறுதி சடங்கில் சசிகலா நடராஜன் கலந்து கொள்ளவில்லை. ஏனேனில் முதல்வர் ஜெயலலிதா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சிறப்பு வார்டுக்கு நேற்று மாற்றப்பட்டார். இதன் காரணமாக அவரது சின்னம்மா இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த மாதம் சசிகலாவின் நாத்தனார் அதாவது கணவர் நடராஜனின் சகோதரி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்குக்கு சசிகலா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்வர் ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் கவனித்து வருவதால் அவர் கடைசி நேரத்தில் செல்லவில்லை.
இந்நிலையில் சசிகலாவின் அப்பாவின் தம்பி வைத்திலிங்கம் சாளுவரின் மனைவியான குணர்பூசணி அம்மாளின் இறுதிச் சடங்கிலும் கலந்துகொள்ளவில்லை.