ஆழ்வார்குறிச்சி கோயில் கொடை விழா: பழம் எறிதல் நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்பு
ஆழ்வார்குறிச்சி பெருமாள் கோயில் கொடைவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கடையம்: ஆழ்வார்குறிச்சி சாஸ்தா கோயில் கொடை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற பழம் எறிதல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆழ்வார்குறிச்சியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் பெருமாள் சாஸ்தா சுடலை மாடசாமி கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் கொடை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா கடந்த 1ம் தேதி கோலாகலமாக துவங்கியது. அத்துடன்,நேற்று முன்தினம் மாலை கும்பம் ஏற்றப்பட்டு குடியழைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நேற்று காலை, பால்குட ஊர்வலம், அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில் மதியம் 12 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான பட்டாணிபாறையில் பழம் எறிதல் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, கிடைத்த பழங்களை பிரசாதமாக பெற்றனர். பின்னர், மகா அபிஷேக, அலங்கார தீபாராதனை, மற்றும் அர்த்தஜாம பூஜைகள் நடைபெற்றன. இதனையடுத்து இன்று சின்னநம்பி பூஜை நடைபெற்று வருகிறது. இந்த பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.