ரஜினி அண்ணன் சொல்வதைப் பார்த்தால்.. அப்ப அவங்க நீக்கம் உண்மைதானா?
சுதாகர், ராஜு மகாலிங்கம் மீது திருப்தியில்லை என்று ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணா தெரிவித்துள்ளார்.
சென்னை: சுதாகர், ராஜு மகாலிங்கம் மீது திருப்தியில்லை என்று ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணா தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுக்கு பதில் வேறு நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்படுவர் என்றும் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அரசியலுக்கு வருவதாக ரசிகர்கள் மத்தியில் அறிவித்தார். அதற்கடுத்த நாளே ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை தொடங்கினார்.
இந்நிலையில் லைக்கா நிறுவனத்தின் செயல் அதிகாரியாக இருந்த ராஜு மகாலிங்கம் அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு ரஜினியுடன் இணைந்தார்.
ரஜினி பொறுப்பு
இதையடுத்து அவருக்கு ரஜினி மக்கள் மன்ற செயலாளர் பதவி கிடைத்தது. அதன்படி கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி பொறுப்பேற்றார். கார்ப்பரேட் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரை ரஜினி இணைத்து கொண்டு முக்கிய பொறுப்பளித்ததற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ரஜினி உத்தரவு
இந்நிலையில் ராஜு மகாலிங்கத்தின் தலையீடு அதிகமாக இருந்ததால் நிர்வாகிகளும் ரசிகர்களும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை கடந்த ஜூலை 12-ஆம் தேதி நீக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும் மன்றம் பக்கமே இனி வரக் கூடாது என்று ரஜினி உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
சுதாகர் மறுப்பு
ஆனால் இதை மன்ற நிர்வாகி சுதாகர் மறுத்து அறிக்கை வெளியிட்டார். அதில் சமூக வலைத்தளங்களில் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜு மகாலிங்கத்தை நீக்கி விட்டதாக செய்தி பரவிவருகிறது , இந்த செய்தி உண்மைக்கு புறம்பானதால் யாரும் நம்பவேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.
நியமனம்
இந்த விவகாரம் தற்போது அமைதியாக உள்ள நிலையில் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா ஒரு புகாரை தெரிவித்துள்ளார். அதாவது சுதாகர் மற்றும் ராஜு மகாலிங்கம் ஆகியோரின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்பதால் அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்படுவர் என்றும் சத்யநாராயணா கூறியுள்ளார்.
பெரிய பிரச்சினை
இவர் கூறியுள்ளதை பார்க்கும்போது ரஜினி மக்கள் மன்றத்தில் மிகப்பெரிய பிரச்சினை ஓடிக் கொண்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. எனவே சத்யநாராயணா சொல்வதை போல் சுதாகரும், ராஜு மகாலிங்கமும் நீக்கப்படுவார்களா என்பது போக போகத்தான் தெரியும்.